பயிற்சிகளில் ஈடுபட்டுள்ள வீரர்கள்
ஐபிஎல் போட்டிகள் வரும் 19ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுவதால் யூஏஇயில் இந்த தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 20ம் தேதியையொட்டி அனைத்து ஐபிஎல் அணி வீரர்களும் துபாய்க்கு சென்று தற்போது குவாரன்டைனை முடித்துவிட்டு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிசிசிஐக்கு அணிகள் வலியுறுத்தல்
ஐபிஎல் போட்டிகள் துவங்க இன்னும் 18 நாட்களே உள்ள நிலையில் இன்னும் அதற்கான அட்டவணையை வெளியிடாமல் பிசிசிஐ காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் ஐபிஎல் அணிகள் கடுமையான அதிருப்தியில் உள்ளன. அட்டவணை வெளியிடப்பட்டால் மட்டுமே அதற்கேற்ப திட்டமிட முடியும் என்பது அணிகள் தரப்பு வாதம்.
பிசிசிஐ ஆலோசனை
ஐபிஎல் போட்டிகள் அதிகளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அபுதாபியில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து செய்வதறியாது பிசிசிஐ முழி பிதுங்கியுள்ளது. இதுகுறித்தும் மற்றும் வீரர்களின் பயணங்கள் உள்ளிட்டவை குறித்தும் எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்துடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிகிறது.
சிஎஸ்கேவில் குழப்பம்
மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2 வீரர்கள் உள்பட 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதும், அணி வீரர் சுரேஷ் ரெய்னா இந்த சீசனில் இருந்து விலகியுள்ளதும் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்தும் தற்போது பிசிசிஐ யோசித்து வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் அட்டவணையை உடனடியாக வெளியிட ஐபிஎல் அணிகள் வலியுறுத்தி வருகின்றன.
தாமதத்தால் அதிருப்தியில் அணிகள்
ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டால் மட்டுமே தாங்கள் அதற்கேற்ப திட்டமிட முடியும் என்று அணிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிஎஸ்கே அணி வீரர்களின் பெயர்களை வெளியிடாமல் உள்ள பிசிசிஐ மீது கடுப்பில் உள்ள மற்ற அணிகள் அட்டவணை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் அதிருப்தியில் உள்ளது. இந்நிலையில் இன்றோ அல்லது நாளையோ இந்த அட்டவணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.