ஆரம்ப காலத்து ரெய்னா
ஆனால் ஆரம்ப காலத்தில் ரெய்னாவின் கிரிக்கெட் கனவுகள் எளிதாக இருக்கவில்லை. அப்போதெல்லாம் டெல்லியில் கிரிக்கெட் கற்க விரும்பினால் அகாடாமிகள் குறைந்தது மாதம் 8000 வரை கட்டணம் வசூலித்தனர். அது ரெய்னாவுக்கு மிகப் பெரிய நிதிச் சுமையாக இருந்தது. காரணம் அவரது தந்தையின் மாத வருமானமே பத்தாயிரம்தானே. இதில் ரெய்னாவின் குடும்பம் வேறு பெரிது. மொத்தம் 8 பேர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார் ரெய்னா.
மாற்றம் தந்த லக்னோ கல்லூரி
இந்த நிலையில்தான் லக்னோவில் உள்ள குரு கோபிந்த் சிங் ஸ்போர்ட்ஸ் காலேஜில் அவருக்கு இடம் கிடைத்தது. அங்கு சேர்ந்த பிறகுதான் அவரது கனவுக்கான முதல் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு நடந்தது வரலாறு. கொஞ்சம் கொஞ்சமாக தேர்ந்த வீரராக உருவெடுத்தார் ரெய்னா. சறுக்கலில் ஆரம்பித்த ரெய்னாவின் கனவுகள் இன்று சாதனைகளாக விஸ்வரூபம் எடுத்து ஓய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனது வாழ்க்கை குறித்து ரெய்னா கூறுகையில், எனது அப்பா ராணுவத்தில் இருந்தார். அண்ணனும் அங்குதான் இருந்தார். அப்பா குண்டுகள் தயாரிப்பில் நிபுணர் ஆவார். பெரிய குடும்பம் எங்களுடையது. வருமானம் பெரிதாக இருந்ததில்லை என்றார்.
காஷ்மீரில் கிடைத்த கசப்பு
எனது அப்பாதான் எல்லோரையும் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது என்றார் ரெய்னா. 90களில் இவரது குடும்பம் ஜம்மு காஷ்மீரில் வசித்து வந்தது. அப்போது காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு எதிரான கலவரத்தில் தனது குடும்பம் சிக்கி விடாமல் காக்க குடும்பத்தினரை ரெய்னாவாரி என்ற இடத்தில் விட்டு விட்டு வந்தார் திரிலோக்சந்த். அவர் மட்டும் உ.பியின் முத்ராநகரில் குடியேறினார். ஆனாலும் குடும்பத்தினரை விட்டுப் பிரிந்து வாழ்வது அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது. இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில், எனது அப்பா மற்றவர்களுக்காக வாழ்ந்தவர். மற்றவர்களுக்கு அதிகம் உதவிகள் செய்வார். தனக்காக வாழ வேண்டும் என்று கொஞ்சமும் யோசிக்காதவர் என்று தெரிவித்தார்.
8 பேர் கொண்ட குடும்பம்
எங்க குடும்பத்தில் எனக்கு ஐந்து சகோதரர்கள், ஒரு சகோதரி. குருகோபிந்த் சிங் கல்லூரிதான் எனக்கு பெரும் உதவியாக இருந்தது. அந்தக் கல்லூரியில் வருடத்திற்கு ரூ. 5000 கட்டணம். அதையே எனது தந்தை கஷ்டப்பட்டுதான் கட்டினார். நான் படிப்பு, விளையாட்டு இரண்டைத் தவிர வேறு எதற்குமே ஆசைப்பட்டதில்லை. குடும்ப சூழ்நிலை கருதி எனது தேவைகளையும் சுருக்கிக் கொண்டேன் என்றார்.
ராணுவம்
காஷ்மீரில் நிலைமை மோசமாக இருந்தபோது தனது குடும்பத்தையும், சகோதரர்களையும் பாதுகாக்க அவர் கடுமையாக கஷ்டப்பட்டார். காஷ்மீரில் அவருக்கு கிடைத்தது கசப்பான அனுபவங்களே.. நான் கிரிக்கெட் வீரராக இருந்தபோது சில முறை காஷ்மீருக்குப் போயுள்ளேன். அது எனது தந்தைக்குத் தெரியாது. தோனியுடன் ஒருமுறை எல்லைக் கட்டுப்பாடு பகுதி வரை போயிருக்கிறேன். சில கமாண்டோ வீரர்களையும் நாங்கள் நண்பர்களாகப் பெற்றோம். ஆனால் இதையெல்லாம் அப்பாவிடம் சொல்ல மாட்டேன். கடிந்து கொள்வாரோ என்று பயம்தான் காரணம் என்றார் ரெய்னா.
சச்சின், தோனி அட்வைஸ்
கிரிக்கெட் வாழ்க்கையில் சச்சின் டெண்டுல்கர், தோனி கொடுத்த சில அட்வைஸ்களை கடைசி வரை கடைப்பிடித்தாராம் ரெய்னா. அது என்னவென்றால் அணியின் விஷயங்களை யாரிடமும் எதையும் எப்போதும் சொல்லாதே.. எல்லாவற்றையும் உனக்குள்ளேயே வைத்துக் கொள் என்பதுதான் அதுவாம். அதை கடைசி வரை கடைப்பிடித்தாராம் ரெய்னா. அவர்கள் 2011 உலகக் கோப்பை போட்டிக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த அட்வைஸ் கொடுத்தார்களாம். குறிப்பாக ஐபிஎல் சக வீரர்களிடம் இதுகுறித்து எதையும் விவாதிக்க வேண்டாம் என்று தோனி தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டாராம்.
பாராட்டிய ராகுல் டிராவிட்
2008ல் ஆஸ்திரேலியாத் தொடரில் நாம் வென்றோம். 2009ல் நியூசிலாந்து தொடரில் வென்றோம். 2010 தொடரில் நாம் இலங்கையில் வென்றோம். இந்தத் தொடர்களில் எல்லாம் எனது ஆட்டம் சிறப்பாக இருந்ததாக ராகுல் டிராவிட் பாராட்டினார். அவரது பாராட்டு எனக்கு பெரும் ஊக்கமாக அமைந்தது. ராகுல் டிராவிட் இந்திய அணியின் முக்கியமான சொத்தாக திகழ்ந்தவர். அருமையான கேப்டன். ஒழுக்கமான வீரர். அவரிடமிருந்து நான் நிறையக் கற்றுள்ளேன். அவரது பாராட்டுக்கள் எனக்கு பெரும் ஊக்கமாக அமைந்தது என்றார்.
பெஸ்ட் நண்பர் தோனி
சரி தோனி பற்றி ஏதாவது சொல்லுங்களேன் என்று கேட்டால், தோனி மிகப் பெரிய கேப்டன். எனக்கு மிகச் சிறந்த நண்பர். அவர் சாதித்த எல்லாமே யாராலும் சாதிக்க முடியாதது. உலகின் நம்பர் ஒன் கேப்டன் யார் என்றால் அது நிச்சயம் தோனிதான். உலகின் மிகச் சிறந்த மனிதரும் தோனிதான். மிக மிக எளிமையானவர். பாகுபாடு பார்க்காமல் பழகக் கூடியவர். நல்ல நோக்கங்களைக் கொண்டவர். அவருடன் நான் நீண்ட காலம் செலவிட்டுள்ளேன், பயணம் செய்துள்ளேன், விளையாடியுள்ளேன். அவரைப் போல ஒரு நேர்மையான மனிதரைப் பார்ப்பது கடினம் என்றார்.
தோனி சுயநலமில்லாதவர்
தனது வீரர்களை அழகாக வழி நடத்தும் சிறப்பான கேப்டன் அவர். சுயநலமில்லாதவர். அணியின் வெற்றிக்காக முழுமையாக போராடக் கூடியவர் என்றார் ரெய்னா. தோனி தனது ஓய்வை அறிவித்த உடனேயே ரெய்னாவும் ஓய்வு முடிவை அறிவித்தார் என்பது நினைவிருக்கலாம். சோனு என்ற செல்லப் பெயர் கொண்ட சுரேஷ் ரெய்னா.. சிரமங்களுக்கு மத்தியில் போராடி, ஒரு வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். நிச்சயம் கிரிக்கெட் வரலாற்றில் அவரது ஆட்டமும், பங்களிப்பும் நீண்ட நாட்களுக்குப் பேசப்படும்.