சம்பள உயர்வு இல்லை
உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், இரண்டு ஜாம்பவான்களும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என காத்துக் கொண்டு இருக்கிறார்கள் முதல் தர போட்டிகளில் ஆடும் கிரிக்கெட் வீரர்கள்.
கிரிக்கெட் வீரர் - தலைவர்
கடந்த இரு நாட்கள் முன்பு தான் கங்குலி 39வது பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். கிரிக்கெட் வீரர் ஒருவர் முழுமையான பிசிசிஐ தலைவர் ஆகும் நிகழ்வு இரண்டாவது முறையாக நடந்தது.
தேவை அறிவார்
கங்குலி முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டன் என்பதால் வீரர்களின் தேவை அறிந்து செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல, தற்போது உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் போட்டி நாள் சம்பளத்தை உயர்த்தப் போவதாக தெரிய வந்துள்ளது.
டிராவிட் சந்திப்பு
அடுத்த வாரம் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் ராகுல் டிராவிட்டை சந்திக்க இருக்கும் கங்குலி, உள்ளூர் கிரிக்கெட் மற்றும் அதன் அடுத்த கட்ட வளர்ச்சி திட்டம் பற்றி பேச இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
சம்பளம் உயர்த்தப்படும்
அப்போது டிராவிட்டுடன் கலந்து பேச இருக்கும் கங்குலி, அதன் பின் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் போட்டி நாள் சம்பளத்தை ரூ.35,000-த்தில் இருந்து ரூ.50,000மாக உயர்த்தி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வித்தியாசம் அதிகம்
கங்குலி இந்த முடிவை எடுக்க முக்கிய காரணம், தேசிய கிரிக்கெட் வீரர்களுக்கும், உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையே ஆன சம்பளத் தொகையின் வித்தியாசம் மிகவும் அதிகமாக உள்ளது.
கோடிகளில் உயர்வு
கடந்த சில ஆண்டுகளில் தேசிய அணி வீரர்களின் சம்பளம் குறிப்பிடத்தகுந்த அளவு உயர்ந்துள்ளது. அதுவும் கோடிகளில் உயர்ந்துள்ளது. ஆனால், உள்ளூர் வீரர்கள் சம்பளம் பெரிய அளவில் உயரவில்லை.
பயிற்சியாளர் சம்பளம்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் சம்பளம் சுமார் 10 கோடி என்பது பலரையும் திகைக்க வைத்துள்ளது. ஆனால், உள்ளூர் அணிகளின் பயிற்சியாளர்கள் மற்றும் பிற உதவியாளர்கள் சம்பளம் இன்னும் சில ஆயிரங்கள் மட்டுமே.
காத்திருக்கும் வீரர்கள்
இந்த வித்தியாசத்தை குறைக்கவே கங்குலி அதிரடி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிகிறது. உள்ளூர் அணிகள் அனைத்தும் கங்குலியின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறது. உள்ளூர் வீரர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பயிற்சி அளித்து வரும் டிராவிட்டும் நிச்சயம் அவர்களுக்கு சாதகமாகவே பேசுவார் என்பதில் சந்தேகமில்லை.