பஞ்சாப் அணி மாற்றம்
தொடர்ந்து இரு ஆண்டுகள் அஸ்வின் தலைமையில் இயங்கிய பஞ்சாப் அணி, இரு ஆண்டுகளிலும் தொடரின் துவக்கத்தில் அபாரமாக செயல்பட்டு கடைசியில் தோல்விப் பாதையில் சென்றது. அதனால், அணியை முற்றிலும் மாற்றி அமைக்க திட்டமிட்டது பஞ்சாப் அணி நிர்வாகம்.
பஞ்சாப் அணி நீக்கம்
பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் முன்னதாக நீக்கப்பட்ட நிலையில், அடுத்து அஸ்வின் நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் அஸ்வின் கேப்டன் பதவியில் இருந்து மட்டுமே நீக்கப்படுகிறார் என செய்திகள் வந்தன. ஆனால், தற்போது அவர் அணியில் இருந்தே நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
வாங்கத் துடிக்கும் இரு அணிகள்
ஐபிஎல் விதிப்படி, ஏலத்தில் வாங்கிய அதே விலைக்கு ஒரு வீரரை மற்ற அணிக்கு விற்றுக் கொள்ளலாம். அதன் படி, அஸ்வினை விற்க முடிவு செய்துள்ளது பஞ்சாப் அணி. அவரை ஏல விலையான 7.60 கோடி கொடுத்து வாங்க இரு அணிகள் போராடி வருகின்றன.
அஸ்வின் ரெக்கார்டு
அப்படி பலரும் போட்டி போட முக்கிய காரணம், அஸ்வினின் அனுபவம் மற்றும் ஐபிஎல் ரெக்கார்டு தான். 139 ஐபிஎல் போட்டிகளில் 125 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார், குறைந்த அளவில் தான் ரன்கள் கொடுத்து இருக்கிறார். மேலும், ஏழாம், எட்டாம் இடத்தில் களமிறங்கி அதிரடியாக பேட்டிங்கும் செய்வார்.
டெல்லி கேபிடல்ஸ் முடிவு
அவரை வாங்க முயற்சி செய்யும் இரண்டு அணிகள் - ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ். இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் தான் முந்தும் என கூறப்படுகிறது. கங்குலி, பாண்டிங்கை பொறுத்தவரை அஸ்வின் போன்ற வீரரின் அனுபவத்தை அப்படியே விட்டு விட மாட்டார்கள்.
ரகசியம் இது தான்
டெல்லி அணிக்கு தற்போது அனுபவ வீரர்கள் தான் தேவை. இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இயங்கும் அந்த அணியில் அனுபவ பேட்ஸ்மேனாக ஷிகர் தவான் இருக்கிறார். அவருடன் அஸ்வின் இணைந்தால் அந்த அணி அனுபவம் வாய்ந்த அணியாக மாறிவிடும். அஸ்வினை மடக்க டெல்லி அணி துடிக்க இன்னொரு ரகசியமும் உள்ளது. அது டெல்லி அணியின் சொந்த மைதான பிட்ச் தான்.
ஆடுகளத்தில் என்ன இருக்கிறது?
ஆம், டெல்லி கேபிடல்ஸ் அணியின் சொந்த மைதானம் டெல்லியின் பெரோஸ் ஷா கோட்லா. அந்த மைதானம் முற்றிலும் மந்தமானது. சுழற் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும். ஐபிஎல் லீக் சுற்றில் பாதி போட்டிகளை ஒவ்வொரு அணியும் சொந்த மைதானத்தில் தான் ஆட வேண்டும் என்பதால் சுழற் பந்துவீச்சில் பலமாக இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது டெல்லி.
அஸ்வினை மடக்குமா டெல்லி?
அதைக் கணித்து தான் கங்குலி - ரிக்கி பாண்டிங் அஸ்வினை மடக்க திட்டமிட்டு இருக்கலாம் என தெரிகிறது. கடந்த ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் வரை சென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி இந்த முறை அஸ்வின் போன்ற அனுபவ சுழற் பந்துவீச்சாளரை பிடித்தால், அது பெரிய அளவில் உதவும்.
பின்னடைவு தான்
அஸ்வினுக்கு இந்த மாற்றத்தால் பண இழப்பு எதுவும் ஏற்படாது. அதே 7.60 கோடி ரூபாய் டெல்லி அணி மூலமாக கிடைத்து விடும். ஆனால், டெல்லி கேபிடல்ஸ் அணியில் அவருக்கு கேப்டன் பதவி கிடைக்காது. ஸ்ரேயாஸ் ஐயர் திறமையாக அணியை வழி நடத்தி வருவதால் அவரே தான் அடுத்த தொடரிலும் கேப்டனாக இருப்பார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடர்
அஸ்வினுக்கு ஐபிஎல் தொடரில் மட்டுமில்லாமல், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டெஸ்ட் அணியில் மட்டுமே ஆடி வந்த அவருக்கு அதிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் என்ன நடக்கப் போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்