கவனமில்லை என குற்றச்சாட்டு
ஆண்கள் கிரிக்கெட்டில் வைக்கப்படுவது போல இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மீது போதிய கவனத்தை பிசிசிஐ செலுத்துவதில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் டி20 உலக கோப்பை தொடரில் இறுதி போட்டி வரை வந்து இந்திய மகளிர் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
குறித்த நேரத்தில் நடக்கும்
இந்நிலையில் தற்போது இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பேசியுள்ளார். ஐபிஎல் நிர்வாகிகள் குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், மகளிர் அணிக்கான ஐபிஎல் போட்டிகள் குறித்த நேரத்தில் நடைபெறும் என்று கங்குலி கூறியுள்ளார். மேலும் வீராங்கனைகளுக்கு கூடிய விரைவில் பயிற்சி முகாம்களும் நடத்தப்பட உள்ளதாகவும் கங்குலி குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல்லின் இறுதியில் நடைபெறுகிறது
இதனிடையே, கடந்த ஆண்டை போல ஐபிஎல் போட்டிகளின் இறுதியில் மகளிர் சேலஞ்சர் போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை ஐபிஎல் போட்டிகள் யூஏஇயில் நடைபெறவுள்ள நிலையில், நவம்பர் 1 முதல் 10 வரையில் மகளிர் சேலஞ்சர் தொடர் நடத்தப்பட உள்ளதாகவும் முன்னதாக பயிற்சி முகாம்களும் திட்டமிடப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சவுரவ் கங்குலி திட்டவட்டம்
கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில் கிரிக்கெட் வீரராக இருந்தாலும் வீராங்கனையாக இருந்தாலும் அவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்க பிசிசிஐ விரும்பவில்லை என்றும் கங்குலி குறிப்பிட்டுள்ளார். கொரோனாவால் வீட்டில் முடங்கியுள்ள கிரிகெட் வீராங்கனைகள் அடுத்ததாக தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் அடுத்தடுத்த தொடர்களில் மோதவுள்ளனர்.