பிசிசிஐ தேர்தல்
பிசிசிஐக்கு நீண்ட காலம் கழித்து தேர்தல் நடைபெற உள்ளது. உச்சநீதிமன்றத்தின் தலையீடு காரணமாக கடந்த 3 ஆண்டு காலமாக முன்பு பிசிசிஐயில் ஆதிக்கம் செலுத்தி வந்த குழுக்கள் எந்த அதிகாரமும் இன்றி காணப்பட்டது. இந்த நிலையில், தேர்தல் நடைபெற இருப்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது.
தேர்தலே நடக்காது
தேர்தலில் போட்டியிட பெயர் கொடுக்க திங்கள்கிழமை தான் கடைசி நாள் என்ற நிலையில், அனைத்து பதவிக்கும் தங்களுக்குள் பேசி முடிவு செய்து ஒரு நபரை மட்டுமே தேர்தலில் நிறுத்த முடிவு செய்தது அதிகாரவர்க்கம்.
நீண்ட பேரம்
ஞாயிறு நடு இரவு வரை மும்பையில் இந்த அரசியல் பேரங்கள் நடந்தன. கடுமையான லாபிக்கு நடுவே பிசிசிஐ தலைவர் பதவி தவிர மற்ற பதவிகளுக்கு அரசியல் தொடர்பு கொண்டவர்கள் அல்லது முன்னாள் பிசிசிஐ அதிகாரத்தில் இருந்தவர்களின் உறவினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் பதவிக்கு போட்டி
தலைவர் பதவிக்கு நீண்ட விவாதம் நடந்துள்ளது. முன்னாள் பிசிசிஐ மற்றும் ஐசிசி தலைவரும், ஐபிஎல் அணியான சிஎஸ்கே-வின் உரிமையாளரும் ஆன சீனிவாசன் தன் ஆதரவாளர் ஒருவரை தலைவராக்க காய் நகர்த்தினார்.
கங்குலியுடன் நடந்த பேரம்
இது ஒரு பக்கம் என்றால், அனைவரும் ஒப்புக் கொள்ளும் நபரை தலைவர் ஆக்க வேண்டும் என்ற நோக்கில் கங்குலியை முடிவு செய்த சிலர், 2021 மேற்கு வங்காள தேர்தலில் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என கங்குலியிடம் கேட்டுள்ளனர்.
ஒப்புக் கொள்ளாத கங்குலி
கங்குலி கடைசி வரை அதற்கு பிடி கொடுக்கவில்லை என தெரிகிறது. கிரிக்கெட் நிர்வாகத்தில் தன் குரு ஜக்மோகன் டால்மியா போல உறுதியாக இருந்த கங்குலி, எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. அதனால், அவருக்கு தலைவர் பதவி கிடைக்காது என கருதப்பட்டது.
சீனிவாசன் சொன்ன நபர்
இந்த நிலையில், சீனிவாசன் ஆதரவாளர் பிரிஜேஷ் பட்டேல் பக்கம் காற்று அடித்துள்ளது. சில உடன்பாடுகளின் அடிப்படையில் அவரை போட்டி இன்றி தலைவர் ஆக்க முக்கிய புள்ளிகள் முடிவு செய்துள்ளனர்.
மாநில அமைப்புகள் எதிர்ப்பு
ஆனால், இதற்கு சில மாநில கிரிக்கெட் அமைப்புகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன. மற்ற பதவிகளுக்கு குழுக்கள் சார்ந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டாலும், தலைவர் பதவிக்கு அனைவருக்கும் பொதுவான நபர் தான் வர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
கங்குலிக்கு கிடைத்த வாய்ப்பு
அதனால், அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரே நபரான கங்குலிக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அவரை போட்டி இன்றி ஒரு மனதாக பிசிசிஐ தலைவர் ஆக்க அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஐபிஎல் தலைவர் பதவி
அதே சமயம், சீனிவாசன் ஆதரவாளர் பிரிஜேஷ் பட்டேலுக்கு மிக முக்கியமான ஐபிஎல் தலைவர் பதவி கொடுத்து பேரத்தை முடித்துள்ளனர் என செய்திகள் வெளியாகி உள்ளன. கங்குலி தலைவர் ஆவதில் பிசிசிஐ அதிகார வர்க்கம் மட்டுமின்றி, சாமானிய ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.