பகலிரவு டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது. அகமதாபாத்தில் புதிதாக பெயரிடப்பட்டுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
சவுரவ் கங்குலி ஆரூடம்
இங்கிலாந்து அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்களை அடித்துள்ளது. முன்னதாக இந்த போட்டி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அதிகமாக மாறியுள்ளதாகவும் நம்முடைய வீரர்கள் சிறப்பாக விளையாடுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
நம்பிக்கை இந்தியா
தான் எப்போதும் வெற்றி, தோல்விகள் குறித்து முன்னதாக பேசுவதில்லை என்றும் ஆனால் இந்த போட்டி இந்தியாவிற்கு சாதகமாக அமையும் என்று கருதுவதாகவும் அவர் மேலும் கூறினார். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியின் அபார வெற்றி இந்திய அணிக்கு மிகுந்த தன்னம்பிக்கையை தற்போது அளித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம்
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் பிங்க்-பால் டெஸ்ட்டாக தான் இருக்கும் என்றும் கங்குலி கூறியுள்ளார். மேலும் நரேந்திர மோடி ஸ்டேடியம் வரலாறு படைக்கும் என்றும் அதில் அதிகளவிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.