தேர்வுக் குழு மாற்றம்
தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழுவின் பதவிக் காலம் முடிவடைய சில காலம் இருக்கும் நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலி புதிய தேர்வுக் குழுவை நியமிக்க இருப்பதாக தகவல்கள் வலம் வருகின்றன.
கடும் விமர்சனம்
எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தற்போதைய தேர்வுக் குழு இதுவரை எந்த குழுவும் சந்திக்காத அளவு விமர்சனங்களை சந்தித்தது. இந்த குழுவில் இடம் பெற்று இருந்தவர்கள் அதிக சர்வதேச அனுபவம் இல்லாதவர்கள் எனவும், கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் கைப்பாவையாக செயல்படுவதாகவும் பல முன்னாள் வீரர்கள் கூறி இருந்தனர்.
நீட்டிக்க வாய்ப்பு
இவர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்க வாய்ப்பு இருந்தாலும், பிசிசிஐ தலைவர் கங்குலி அவர்களுக்கு பதவி நீட்டிப்பு அளிக்க மாட்டார் என கூறப்படுகிறது. பல முன்னாள் வீரர்களின் கருத்தும் அதுவாகவே உள்ளது.
கங்குலி முடிவு
சிறந்த சர்வதேச அனுபவம் கொண்ட, கிரிக்கெட்டில் சிறந்த ஆளுமை கொண்டவர்களை புதிய தேர்வுக் குழுவில் கங்குலி நியமிக்க இருப்பதாக தெரிகிறது. அப்படி கங்குலி குறிப்பிட்ட ஐந்து முன்னாள் வீரர்களை தேர்வுக் குழுவில் நியமிக்க இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தலைவர் பதவி
மிக முக்கியமான தேர்வுக் குழு தலைவர் பதவியில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிறந்த கிரிக்கெட் வர்ணனையாளருமான லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது முதல் தொடர்ந்து கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கும் சிவராமகிருஷ்ணன் அனைவராலும் எளிதாக ஏற்றுக் கொள்ளப்படுவார்.
வெங்க்சர்க்காருக்கு பதவி
புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் திலிப் வெங்க்சர்க்கார் தேர்வுக் குழுவில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதாக ஒரு பேச்சு உள்ளது. சிவராமகிருஷ்ணனை விட மூத்த கிரிக்கெட் வீரரான இவர், தலைவர் வெறும் உறுப்பினராக இருப்பாரா? அல்லது தேர்வுக் குழு தலைவராக நியமிக்கப்படுவாரா? என்ற கேள்வி உள்ளது.
அந்த இருவர்
இவர்கள் தவிர்த்து அஜித் அகர்கர், வெங்கடேஷ் பிரசாத் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வெங்கடேஷ் பிரசாத் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முயன்று தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேறு சிலர்
இவர்கள் தவிர்த்து அர்ஷத் அயூப், ஞானேந்திர பாண்டே, தீப் தாஸ்குப்தா, ரோகன் கவாஸ்கர், ஜடின் பரஞ்சே ஆகியோரது பெயரும் அடிபடுகிறது. தேர்வுக் குழுவில் தலைவருடன் சேர்த்து ஐந்து உறுப்பினர்கள் இடம் பெறலாம் என்பதால் இவர்களில் சிலருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.
பொதுக் குழு கூட்டம்
வரும் டிசம்பர் 1 அன்று நடைபெற இருக்கும் பிசிசிஐ பொதுக் குழு கூட்டத்தில் தேர்வுக் குழு குறித்த விவாதம் நடைபெறும் என பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.
எம்எஸ்கே பிரசாத் டீல்
இதற்கிடையே, தற்போதைய தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கிரிக்கெட் போட்டிகளுக்கு தெலுங்கு வர்ணனை செய்ய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியுடன் பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.