கங்குலி போட்டியின்றி தேர்வு
கடந்த திங்கள் அன்று பிசிசிஐ பதவிகளுக்கு நடந்த வேட்பு மனுத் தாக்கலில் ஒவ்வொரு பதவிக்கும் ஒருவர் மட்டுமே மனுத் தாக்கல் செய்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பிசிசிஐ தலைவர் பதவியில் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
முதலில் வந்த செய்தி
முதலில் இது குறித்து வந்த செய்திகளில் கங்குலிக்கு வாய்ப்பின்றி இருந்ததாகவும், சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசனின் ஆதரவாளர் பிரிஜேஷ் பட்டேலுக்கு அதிக வாய்ப்பு இருந்ததாகவும், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த மாநில கிரிக்கெட் அமைப்புகள், கங்குலிக்கு ஆதரவு தெரிவித்ததால் தான் அவர் தலைவர் ஆனார் என கூறப்பட்டு இருந்தது.
பரபரத்த கிசுகிசு
அப்போதே ஒரு கிசுகிசு வலம் வந்தது. வேட்பு மனுத் தாக்கலுக்கு முந்தைய தினம் மத்திய ஆளுங்கட்சியின் உயர்மட்ட தலைவர் ஒருவரை பிசிசிஐ அதிகாரக் குழுக்கள் மற்றும் கங்குலி சந்தித்ததாகவும், அதன் பின்னரே முடிவு எட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது.
கங்குலி மறுப்பு
கங்குலியிடம், நீங்கள் அரசியல் தலைவரை சந்தித்தீர்களா? என முதலில் கேட்ட போது அவர் இல்லை என மறுத்து விட்டார். ஆனால், அது தான் உண்மை என பல ஊடகங்களிலும் செய்திகள் பரபரத்தன. குறிப்பாக, கங்குலி ஆளுங்கட்சியில் சேர இருப்பதாக கூறப்பட்டது.
டீலிங் ரகசியம்
மேலும், 2021 மேற்கு வங்காள மாநில தேர்தலில் பாஜக கட்சியை ஆதரித்து கங்குலி பிரச்சாரம் செய்வார் என்றும் கிசுகிசுக்கள் வலம் வந்தன. அதை கங்குலி ஒப்புக் கொண்டதால் தான் அவருக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைத்துள்ளது என்றும் கூறப்பட்டு இருந்தது.
ஒப்புக் கொண்ட கங்குலி
இந்த நிலையில், தான் அமித் ஷாவை பார்த்ததை ஒப்புக் கொண்டுள்ளார் கங்குலி. ஆனால், வேறு எந்த அரசியலும் பேசவில்லை என்றும், பிசிசிஐ தலைவர் பதவி குறித்தும் பேசவில்லை என்றும் கூறினார் அவர்.
என்ன சொன்னார்?
கங்குலி கூறுகையில், "அமித் ஷாவை நான் முதன்முறையாக பார்த்தேன். நான் பிசிசிஐ பதவி கிடைக்குமா? கிடைக்காதா? என எந்த கேள்வியும் கேட்கவில்லை. இதை ஒப்புக் கொண்டால் அது நடக்கும் என்பது போல நாங்கள் எதுவும் விவாதிக்கவில்லை. எந்த அரசியலும் இல்லை" என்றார்
இதற்கு முன்பும்..
மேலும், "இதே போன்ற அரசியல் கேள்விகள் முன்பு நான் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா திதியை சந்திக்கும் போதும் என்னிடம் கேட்கப்பட்டது" என்றார் கங்குலி. கங்குலி - அமித் ஷா சந்திப்பு பற்றி செய்திகள் வலம் வந்த அதே நேரத்தில், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கங்குலிக்கு வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமித் ஷா பொதுவான கருத்து
இந்த சந்திப்பு குறித்து இந்தியா டுடே-க்கு அமித் ஷா பதில் அளித்துள்ளார். அவர், "யார் பிசிசிஐ தலைவர் ஆவது என்பதை நான் முடிவு செய்யவில்லை. பிசிசிஐக்கு என்று தனி தேர்தல் நடைமுறை உள்ளது" என்றார். கங்குலி குறித்து கூறுகையில், "அவர் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். நான் கிரிக்கெட்டுடன் நீண்ட காலம் தொடர்பில் இருக்கிறேன். கங்குலி என்னை சந்திப்பதில் எந்த தீங்கும் இல்லை" என்றார்.
மேற்கு வங்காள அரசியல்
மேற்கு வங்க மாநிலத்தின் ஹீரோவான முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கங்குலியை வைத்து இரு கட்சிகள் கேம் ஆடத் துவங்கி உள்ளன. கங்குலி என்ன கேம் ஆடப் போகிறார்? என்பது தான் இப்போதைய கேள்வி.