2019 உலகக்கோப்பை தொடர்
2019 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டி தான் தோனி கடைசியாக ஆடிய கிரிக்கெட் போட்டி. அதன் பின் இந்திய அணி பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் ஆடினாலும், அவற்றில் தோனி இடம்பெறவில்லை.
வாய்ப்பு இல்லை
தோனிக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என சிலர் கூறி வருகின்றனர். சிலர் தோனி தாமாகவே விடுப்பு எடுத்துக் கொண்டு இருக்கிறார் என கூறி வருகின்றனர்.
மீண்டும் அணியில் வாய்ப்பு?
தோனிக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா? என்பது கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது. அதே சமயம், தோனி 2020 ஐபிஎல் தொடருக்கு தன்னை தயார் செய்யத் துவங்கினார்.
ரவி சாஸ்திரி கருத்து
தோனிக்கு அணியில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்விக்கு சமீபத்தில் பதில் அளித்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, 2020 ஐபிஎல் தொடருக்கு பின் தான் தோனி அணியில் ஆடுவாரா? என்பது தெரியும் எனக் கூறினார்.
பண்ட், சஞ்சு சாம்சன் செயல்பாடு
இளம் விக்கெட் கீப்பர்கள் ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் அணியில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை வைத்தும், தோனி எப்படி ஐபிஎல் தொடரில் செயல்படுகிறார் என்பதை வைத்தும் தான் எதையும் சொல்ல முடியும் என கூறி இருந்தார் ரவி சாஸ்திரி.
தோனி பதில்
இதே போல, தோனியிடம் ஒரு நிகழ்ச்சியில் மீண்டும் இந்திய அணிக்கு ஆடுவது பற்றி கேட்ட போது அவர், "ஜனவரி வரை எதுவும் கேட்காதீர்கள்" எனக் கூறி மர்மமாக பதில் அளித்தார்.
கங்குலி பதில்
இந்த நிலையில் ரவி சாஸ்திரியின் கருத்து பற்றி பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் கேட்ட போது, "என்ன நடக்கிறது என பார்ப்போம். நிறைய நேரம் இருக்கிறது. நிச்சயம், இது மூன்று மாதங்களில் தெளிவாகி விடும்" என்றார்.
தெளிவு இருக்கிறது
தோனி விவகாரத்தில் எல்லாம் தெளிவாக இருப்பதாக கூறிய கங்குலி, சில விஷயங்களை பொதுவெளியில் பேச முடியாது. சரியான நேரம் வரும்போது உங்களுக்கே தெரியும் என்றார்.
வெளிப்படைத்தன்மை இருக்கிறது
போர்டு, தோனி, தேர்வுக் குழு இடையே வெளிப்படைத்தன்மை இருக்கிறது. தோனி போன்ற சாம்பியன் வீரரை வைத்து அணுகும் போது சில விஷயங்கள் மூடிய கதவுகளுக்கு உள்ளே தான் இருக்க வேண்டும். அனைவருக்கும் இந்த விஷயத்தில் தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பது தெரியும் என்றார் கங்குலி.
பதில் என்ன?
ரவி சாஸ்திரி, தோனி, கங்குலி என அத்தனை பேரும் பதில் அளித்த பின்னரும் தோனி இந்திய அணிக்கு மீண்டும் ஆடுவாரா? இல்லையா? என்ற கேள்விக்கான விடை மர்மமாகவே உள்ளது.