2020 ஐபிஎல் திட்டம்
2020 ஐபிஎல் தொடர் மார்ச் கடைசி வாரத்தில் துவங்க உள்ளது. அதற்கான திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு சந்தித்து சமீபத்தில் முடிவு செய்தன. இந்த முறை ஐபிஎல் தொடருக்கு முன் பிரம்மாண்ட விழா நடத்தப்படாது என கூறப்படுகிறது.
கண்காட்சிப் போட்டி
அதே சமயம், தொடருக்கு முன்னதாக ஒரு கண்காட்சி போட்டியை நடத்த திட்டம் பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் இருவரும் இணைந்து முடிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் பிரபலமான கூடைப்பந்து தொடரான என்பிஏ-வில் நடத்தப்படும் ஆல்-ஸ்டார்ஸ் போட்டியை போன்றே, இந்த போட்டியும் திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டு அணிகள்
என்பிஏ ஆல்-ஸ்டார்ஸ் போட்டிகள் பெரிய நடைமுறையின் படி செயல்படுத்தப்படும் நிலையில், ஐபிஎல் ஆல்-ஸ்டார்ஸ் போட்டி சிறிய அளவில் திட்டமிடப்பட்டு, எளிமையான முறையில், நடைபெற உள்ளது. அதன்படி, தற்போது உள்ள எட்டு ஐபிஎல் அணிகள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட உள்ளன.
சவுத் வெஸ்ட் அணிகள்
ஐபிஎல் சவுத் - வெஸ்ட், ஐபிஎல் நார்த் - ஈஸ்ட் என இரு அணிகளாக எட்டு அணிகளும் பிரிக்கப்படும். சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் சவுத் வெஸ்ட் அணியில் இடம் பெறுவர்.
நார்த் - ஈஸ்ட் அணிகள்
டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் நார்த் - ஈஸ்ட் அணியில் இடம் பெறுவர். இதன் அடிப்படையில் எதிரணியாக ஐபிஎல்-இல் மோதி வரும் வீரர்கள் ஒரே அணியில் ஆடும் வாய்ப்பு ஏற்படும்.
முன்னணி வீரர்கள்
இந்த திட்டம் 2020 ஐபிஎல் தொடரிலேயே சாத்தியம் ஆகுமா? என்ற கேள்வி ஒருபுறம் இருக்கிறது. ஆனால், சவுத் - வெஸ்ட் அணி குறித்து இப்போதே பரபரப்பாக பேசப்படுகிறது. காரணம், இந்திய அணியில் இடம் பெற்ற பல முன்னணி வீரர்கள் இந்த அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
இந்திய வீரர்கள்
தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய உலக அளவில் முன்னணியில் இருக்கும் மூன்று இந்திய வீரர்கள் இந்த அணியில் இடம் பெறுவார்கள். இவர்கள் மட்டுமின்றி ஜடேஜா, பும்ரா, சாஹல், ஹர்திக் பண்டியா போன்ற இந்திய அணி வீரர்களும் இதே அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
தலை சிறந்த வீரர்கள்
இவர்கள் அனைவரும் சேர்ந்து விளையாடும் முடிவு எடுக்கப்பட்டால் இது ஒரு குட்டி இந்திய அணியாகவே இருக்கும். இந்திய வீரர்கள் மட்டுமின்றி கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர், ஏபி டி வில்லியர்ஸ், ரஷித் கான் என உலகின் பல்வேறு தலைசிறந்த வீரர்களும் இந்த அணியில் இடம் பெறுவர்.
கேப்டன் யார்?
இந்த அணிக்கு யார் கேப்டனாக இருப்பார்? என்பதே ரசிகர்கள் இடையே பேசப்பட்டு வருகிறது. மேற்கூறிய வீரர்களிலேயே ஆறு கேப்டன்கள் இருக்கிறார்கள். தோனி, ரோஹித் சர்மா, விராட் கோலி, கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர் மற்றும் கேன் வில்லியம்சன் என அனைவருமே கேப்டனாக இருக்க தகுதியானவர்கள் தான்.
தோனிக்கு வாய்ப்பு
எனினும், இவர்களில் மூத்த வீரரும், அதிக அனுபவம் கொண்டவருமான தோனி கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரில் அதிக முறை சிஎஸ்கே அணியை பிளே-ஆஃப் மற்றும் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றவர் தோனி.
மீண்டும் தோனியின் கீழ்..
ரோஹித் அதிக முறை கோப்பை வென்ற கேப்டனாக இருந்தாலும், தோனியின் அனுபவம் காரணமாக அவர் அந்த அணிக்கு கேப்டனாக இருப்பார் என கணிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் நடந்தால், கோலி, ரோஹித் சர்மா இருவரும் தோனியின் கீழ் நீண்ட காலம் கழித்து ஆடும் வாய்ப்பு ஏற்படும்.