கொல்கத்தா வெறிச்சோடியது
கொல்கத்தா நகரம் வெறிச்சோடிக் கிடப்பதையும் சாலையில் ஒரு ஆள் நடமாட்டமே இல்லாமல் இருப்பதையும் கங்குலி புகைப்படங்களாக போட்டுள்ளார். அதைப் போட்டு என்னுடைய நகரமா இது.. நினைத்துக் கூட பார்க்கவில்லை இப்படி ஆகும் என்று வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது வருத்தம் இந்த கொரோனாவைரஸ் நம்ம ஊரை, நமது மக்களை பாதித்து விட்டதே என்றுதான்.
பாதுகாப்பாக வீட்டில் இருங்கள்
அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். வீட்டிலேயே இருங்கள். எல்லாம் விரைவில் மாறும், நல்லதாக மாறும். அனைவருக்கும் எனது அன்பும், ஆதரவும் என்றும் கூறியுள்ளார் கங்குலி. கங்குலி மட்டுமல்ல இந்திய விளையாட்டுத்துறையினர் அனைவருமே கூட இந்த நிலையால் சோகமாகவே உள்ளனர். ஆனால் தேசத்தின் நலன் மற்றும் மக்களின் நலனுக்காக அனைவரும் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இதுவரை 10 பேர் பலி
இந்தியாவில் இதுவரை 10 பேர் கொரோனாவைரஸுக்குப் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை 16000 பேர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்தியாவிலும் கூட விளையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டு விட்டன. குறிப்பாக ஐபிஎல் போட்டிகள் தள்ளிப் போடப்பட்டு விட்டன.
முடங்கிப் போன விளையாட்டு
கிரிக்கெட் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் எந்த விளையாட்டுப் போட்டியும் நடைபெறவில்லை. கிரிக்கெட்டை விட பிரபலமான கால்பந்துப் போட்டிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டன. ஐரோப்பிய நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதால் கால்பந்து உலகமே முடங்கிப் போய் விட்டது. அனைத்து வீரர்களும் வீராங்கனைகளும் மக்களை கவனமுடன் இருக்குமாறு தொடர்ந்து கோரி வருகின்றனர்.