மோசமான ஆட்டம்
37 வயதான சாஹா, சரியாக 11 ஆண்டுகளுக்கு முன் தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடினார். தோனி தற்போது ரிஷப் பண்ட் ஆகியோர் ஆதிக்கத்தால் சாஹாவுக்கு அணியில் களமிறங்க வாய்ப்பு கிடைக்காது. அப்படி கிடைத்தாலும் அவர் அதனை பயன்படுத்தி கொள்ள மாட்டார். கடைசியாக விளையாடிய 14 இன்னிங்சில் சாஹா ஒரு முறை கூட அரைசதம் அடித்தது இல்லை. இதில் அவரது அதிகபட்ச ஸ்கோரே 29 ரன்கள் தான்.சராசரி வெறும் 14 தான்.
காலம் மலையேறியது
சாஹா கடைசியாக அரைசதம் அடித்தது 2017ஆம் ஆண்டு தான். இப்படி பேட்டிங்கில் சொதப்பும் சாஹா, விக்கெட் கீப்பிங் செய்வதில் கில்லாடி. பந்து எங்கு சென்றாலும் ஸ்பைடர்மேன் போல் பந்தை தாவி பிடித்துவிடுவார். ஆனால் வெறும் விக்கெட் கீப்பிங் செய்வதற்காகவே வீரர்கள் அணியில் இருந்த காலம் எல்லாம் மலையேறி போய்விட்டது. இப்போது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மட்டும் தான் அனைத்து அணிக்குமே தேவை.
கங்குலி தயவு
சாஹா அணியில் இருக்க காரணமே கங்குலியின் தயவு தான் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஏனெனில் இருவருமே மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் தான். மேற்கு வங்கத்தின் பிரதிநிதியாக இந்திய அணியில் விளையாடும் ஒரே வீரரும் சாஹா தான் ( ஷமியின் சொந்த மாநிலம் உ.பி., ஆனால் ரஞ்சி கோப்பையில் மேற்கு வங்கத்திற்காக விளையாடுகிறார்). இதனால் சாஹாவை அணியில் எடுக்குமாறு பல ஆண்டுகளாகவே வெளிப்படையான கருத்துக்களை தெரிவித்தவர் கங்குலி . தற்போது அவர் பி.சி.சி.ஐ.யில் தலைவராக இருக்கும் போது சாஹாவை நீக்க யாருக்கு தான் தைரியம் வரும்.
வாய்ப்பு
37 வயதான சாஹாவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கி ஊக்கப்படுத்துவதற்கு பதில் கே.எஸ். பரத் மற்றும் சஞ்சு சாம்சன் போல் வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாஹாவை கூடுதல் விக்கெட் கீப்பராக கூட அணியில் சேர்க்க வேண்டாம் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனால் சாஹாவே விரைவில் ஓய்வை அறிவித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.