கொரோனா வைரஸ் பாதிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைபெறவில்லை. அனைத்து கிரிக்கெட் போர்டுகளும் கடும் நஷ்டத்தில் உள்ளன. அதனால் அனைத்து அணிகளும் கிரிக்கெட் போட்டிகளை துவக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
மீண்டும் துவங்கும் கிரிக்கெட்
மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை துவங்குவதில் முதல் அணியாக இங்கிலாந்து அணி முந்திக் கொண்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ஜூலையிலும், பாகிஸ்தான் அணியுடன் ஆகஸ்ட் மாதத்திலும் தங்கள் நாட்டில் கிரிக்கெட் தொடரை நடத்த உள்ளது அந்த அணி.
பிசிசிஐ திட்டம்
பிசிசிஐ விரைவில் ஐபிஎல் தொடர் மற்றும் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு திட்டமிட்டு உள்ளது. ஐபிஎல் தொடரை செப்டம்பர் - அக்டோபர் மாதத்திலும், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை நவம்பரில் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.
இந்திய வீரர்கள் நிலை
இதற்கிடையே இந்திய அணி வீரர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அவர்கள் அனைவரையும் பயிற்சி முகாமுக்கு அழைத்து ஒரு மாத காலம் பயிற்சி அளித்தால் மட்டுமே ஐபிஎல், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவர்களை பங்கேற்கச் செய்ய முடியும்.
பயிற்சி முகாம்
இந்திய அணி பயிற்சி முகாம் ஜூலையில் நடக்க உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் கடந்த வாரம் வெளியானது. இந்தியாவில் லாக்டவுன் விதிகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பயிற்சி முகாம் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. ஆனால், தற்போது அதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தள்ளி வைப்பு
பிசிசிஐ தலைவர் கங்குலி, ஆகஸ்ட் வரை பயிற்சி முகாம் நடத்த வாய்ப்பு இல்லை என சமீபத்தில் கூறி இருக்கிறார். ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா, புஜாரா உள்ளிட்ட வீரர்கள் வெளிப்புறங்களில் தனிப்பட்ட முறையில் பயிற்சி செய்யத் துவங்கி உள்ள நிலையில் இந்திய அணி பயிற்சி முகாம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் தவிப்பு
இந்திய வீரர்கள் மூன்று மாதங்களாக பயிற்சி இன்றி வீட்டிலேயே இருக்கும் நிலையில், அவர்கள் ஒரு மாத காலம் பயிற்சி மேற்கொண்டால் மட்டுமே மீண்டும் துடிப்புடன் கிரிக்கெட் ஆட முடியும் எனவும், பயிற்சி இல்லாமல் ஆடினால் காயங்கள் ஏற்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது. அதனால், வீரர்கள் பயிற்சி செய்ய வாய்ப்பின்றி தவித்து வருகிறார்கள்.
காரணம் என்ன?
அதற்கு என்ன காரணம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக உச்சம் அடைந்துள்ளது. தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதன் காரணமாகவும் கங்குலி பயிற்சி முகாமை தள்ளி வைத்திருக்கக் கூடும்.
கிரிக்கெட் தொடர் சிக்கல்
அது மட்டுமின்றி, இங்கிலாந்தில் நடைபெற உள்ள இரண்டு கிரிக்கெட் தொடர்களும் எந்த சிக்கலும் இன்றி நடந்தால் தான் அனைத்து அணிகளும் கிரிக்கெட் போட்டிகளை நடத்தத் துவங்கும். அதனால், வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடியும் வரை காத்திருக்கும் முயற்சியாகவும் கங்குலி இந்த முடிவை எடுத்து இருக்கலாம்.