ரிஷப் பண்ட் பார்ம் அவுட்
இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் வீரர்களில் சமீப காலத்தில் பார்ம் அவுட் ஆகி இருக்கும் வீரர் ரிஷப் பண்ட் தான். உலகக்கோப்பை முதல், வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை மோசமான பார்மில் இருந்தார்.
டி20 அணி சிக்கல்
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் ரன் குவிக்கவில்லை என்றால் அவரது இடம் பறிபோகும் அபாயம் உள்ளது. தென்னாப்பிரிக்க டி20 தொடரின் முதல் போட்டியில் 4 ரன்கள் தான் எடுத்தார் அவர். அதனால் சிக்கலில் இருக்கிறார்.
ரசிகர்கள் விமர்சனம்
ரிஷப் பண்ட் தவறான ஷாட் ஆடி ஆட்டமிழந்து வருவது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ரசிகர்கள் ஒவ்வொரு முறை அவர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்கும் போதும், அவரை நீக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
கங்குலி ஆதரவு
இந்த நிலையில் தான் அவருக்கு ஆதரவு அளித்து பேசி இருக்கிறார் முன்னாள் கேப்டன் கங்குலி. ரிஷப் பண்ட் இந்திய அணியின் எதிர்கால அதிரடி வீரர், போட்டிகளை வென்று கொடுப்பார் என பாராட்டி பேசி இருக்கிறார்.
பலமான இந்திய அணி
கங்குலி கூறியது - தற்போது உள்ள இந்திய அணி பலமான அணியாக உள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி தான் அணியின் முக்கிய வீரர்கள் என நான் கூற மாட்டேன். ஏனெனில், அவர்கள் அப்படித் தான் இருக்கிறார்கள்.
எதிர்காலம் யார்?
நீங்கள் போட்டிகளை வென்று கொடுக்கும் அதிரடி வீரர் (X ஃபேக்டர்) என் குறிப்பிடும் போது எதிர்கால வீரர்களை பற்றித் தான் பேச வேண்டும். ரிஷப் பண்ட் அப்படிப்பட்ட வீரர்களில் ஒருவர். அவரை நாம் பார்க்க வேண்டும்.
பொறுமை வேண்டும்
அவர் மீது சற்று பொறுமையுடன் இருங்கள். அவர் ஒவ்வொரு முறை ஆட்டமிழக்கும் போதும், நாடு மேலேயும், கீழேயும் சென்று வருகிறது. பண்ட் பந்தை மேலே அடித்தால், ட்விட்டர் அவர் எப்போது ஆட கற்றுக் கொள்வார் என எகிறுகிறது.
அதிரடி வீரர்கள் தேவை
ஆனால் உங்களுக்கு போட்டிகளை வென்று கொடுக்கும் வீரர்கள் வேண்டும் என்றால், அவரை நீங்கள் அவர் போக்கில் விட்டு விட வேண்டும். போட்டியை மாற்றும் விஷயத்தை செய்ய பண்டியா, ரிஷப் பண்ட் போன்ற அதிரடி வீரர்கள் தேவை. இந்திய கிரிக்கெட்டில் பண்ட் பெரிய சக்தியாக இருப்பார் என்றார் கங்குலி.