சர்ச்சை பேச்சு
ஹர்திக் பண்டியா மற்றும் ராகுல் காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் பெண்களை அணுகும் முறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினர். அதற்காக அவர்கள் விசாரணை முடியும் வரை இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இடை நீக்கம்
பண்டியா மன்னிப்பு கோரியும் அவருக்கு தண்டனை விதிக்க வேண்டும் என சில பிசிசிஐ அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதால், சில போட்டிகள் தடை என்ற தண்டனை, இடை நீக்கம் என மாறியுள்ளது. தற்போது இந்த இடை நீக்கம் விசாரணை முடியும் வரை நீடிக்கும் என கூறப்படுகிறது.
ஆறு மாதம் நீக்கமா?
அதிகபட்சம் ஆறு மாதம் வரை இந்த இடை நீக்கம் நீடிக்க வாய்ப்புண்டு. அந்தளவிற்கு இந்த விவகாரம் செல்லாது என்றாலும், இடை நீக்கம் என்பது அதிகப்படியான தண்டனை என கருதப்படுகிறது. இது குறித்து கங்குலி தன் கருத்துக்களை கூறி உள்ளார்.
கங்குலி ஆதரவு கருத்து
கங்குலி கூறுகையில், "மனிதர்கள் தவறு செய்வார்கள். அதை நீண்ட தூரம் எடுத்துச் செல்ல வேண்டாம். இதை செய்தவர்கள் நிச்சயம் நல்ல மனிதராக மாறி வருவார்கள். நாம் எல்லோரும் மனிதர்கள், என்ன போடுகிறோமோ, அது சரியாக வெளியே வரும் இயந்திரம் அல்ல. நீங்களும் வாழ வேண்டும். அடுத்தவர்களையும் வாழ விட வேண்டும்" என அழுத்தம் திருத்தமாக பேசியுள்ளார்.
பண்டியா நிலை மோசம்
பண்டியா தான் இந்த விவகாரத்தில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அதிக சர்ச்சைப் பேச்சுக்களை பேசியதும் பண்டியா தான். தற்போது ஹர்திக் பண்டியா சில விளம்பர ஒப்பந்தங்களை இந்த சர்ச்சையால் இழந்துள்ளார்.
உரிய தண்டனை கிடைக்க வேண்டும்
மேலும், பிசிசிஐயில் பலரும் இந்த விவகாரத்தை, ஒரீரு போட்டி தடை அல்லது எச்சரிக்கையுடன் முடிவுக்கு கொண்டு வர நினைக்கும் நிலையில், நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி மட்டுமே இந்த விவகாரத்தில் இருவருக்கும் உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என கூறி வருவதாகவும், அதனாலேயே இருவரும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
வழி பிறக்குமா?
கங்குலி வெளிப்படையாக இந்த விவகாரத்தை பெரிதாக்காமல் அவர்களை இதில் இருந்து மீள உதவ வேண்டும் என கூறி ஆதரவு அளித்து இருப்பதை அடுத்து பண்டியா - ராகுலுக்கு இடை நீக்கத்தில் இருந்து தப்பிக்க ஏதேனும் வழி பிறக்குமா என பார்க்கலாம்.