டெஸ்ட் துவக்கம்
டெஸ்ட் போட்டிகள் என்றாலே துவக்கம் முதல் இறுதி வரை "கட்டை போட்டு" ஆடுவார்கள் என்பதே அதுவரை உலகம் அறிந்திருந்தது. அதிலும் குறிப்பாக, துவக்க வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் மிக கவனமாக ஆடாவிட்டால், மின்னல் வேக ஸ்விங் மற்றும் பவுன்சர்களில் தங்கள் விக்கெட்களை பறிகொடுக்க நேரிடும்.
மிகக் கடினம்
ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரர்களாக மலை போல ரன் குவித்த சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலி டெஸ்ட் போட்டிகளில் ஆளுக்கு தலா ஒரு இன்னிங்க்ஸ் மட்டுமே துவக்க வீரராக களமிறங்கி உள்ளனர். இருவருமே டெஸ்ட் அணியில் துவக்க வீரராக களமிறங்காமல் தவிர்த்தனர். காரணம், டெஸ்ட் அணி துவக்க வீரராக ஆடுவது மிகக் கடினம்.
இந்திய அணி சிக்கல்
இந்த நிலையில், 2002இல் இந்திய அணி, இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது இந்திய அணியில் சரியான துவக்க வீரர் இல்லை. அணியில் மாற்றம் செய்யலாம் என கேப்டன் கங்குலி - பயிற்சியாளர் ஜான் ரைட் திட்டமிட்டனர். 2001 முதல் ஒருநாள் அணியில் துவக்க வீரராக மாறும் ஆடி வந்த சேவாக் அவர்கள் மனதில் முதலில் வந்தார்.
சேவாக் தேர்வு
உடனே கங்குலி, ஜான் ரைட், சேவாக்கை அழைத்தனர். கங்குலி, சேவாக்கை துவக்க வீரராக களமிறங்குமாறு கூறினார். "ஏன் என்னை துவக்க வீரராக ஆட சொல்கிறீர்கள்?" என கேள்வி எழுப்பி உள்ளார். காரணம், அப்போது அணியில் ஆல் ரவுண்டராக மட்டுமே இருந்தார். மிடில் ஆர்டரில் ஆறாம் வரிசையில் பேட்டிங் செய்து வந்தார்.
விளக்கம் அளித்த கங்குலி
சேவாக் கேள்விக்கு பதில் அளித்த கங்குலி மற்றும் ஜான் ரைட், "உன்னிடம் ஒருநாள் போட்டிகளில் ஏற்கனவே துவக்க வீரராக பேட்டிங் ஆடிய அனுபவம் உள்ளது" என கூறி உள்ளனர். அப்போது சேவாக் ஒரு எதிர்கேள்வி கேட்க, கங்குலி கோபம் அடைந்துள்ளார்.
அந்த கேள்வி
சேவாக் கேட்ட கேள்வி இதுதான், "1994இல் இருந்து ஒருநாள் போட்டிகளில் துவக்கம் ஆடி வரும் டெண்டுல்கர் துவக்க வீரராக இறங்கலாமே, அல்லது 1998இல் இருந்து ஒருநாள் போட்டிகளில் துவக்க வீரராக ஆடி வரும் கங்குலி இறங்கலாமே, நான் மிடில் ஆர்டரிலேயே ஆடிக் கொள்வேன்" என கூறி உள்ளார்.
பெஞ்சில் போய் அமர்ந்து கொள்
இதைக் கேட்ட கேப்டன் கங்குலி கோபமாக, உறுதியாக ஒரு விஷயத்தை கூறினார். "நீ டெஸ்ட் கிரிக்கெட் ஆட வேண்டும் என்றால் இது மட்டும் தான் ஒரே இடம். கேள்வி கேட்காதே. துவக்கம் அளிக்க விருப்பம் இருந்தால் ஆடு, இல்லையென்றால் பெஞ்சில் போய் அமர்ந்து கொள்" என்று கூறி உள்ளார் கங்குலி.
சத்தியம் வாங்கிய சேவாக்
அதன் பின் தன் முடிவை மாற்றிக் கொண்ட சேவாக், கங்குலியிடம் ஒரே ஒரு சத்தியத்தை வாங்கிக் கொண்டார். "தாதா.. எனக்கு ஒரு சத்தியம் மட்டும் செய்யுங்கள். நான் 3 - 4 போட்டிகள் துவக்க வீரராக சரியாக ஆடாவிட்டால், மிடில் ஆர்டரில் ஆட எனக்கு வாய்ப்பு தாருங்கள்." என கேட்டுள்ளார்.
அதிரடி துவக்கம்
சேவாக்கின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார் கங்குலி. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த அந்த டெஸ்ட் போட்டியில் சேவாக் தன் முதல் இன்னிங்க்ஸில் 84 ரன்கள் குவித்தார். அன்று முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடி துவக்கம் அளிக்க முடியும் என வரலாற்றை மாற்றி எழுதினார் சேவாக்.
ரன் குவிப்பு சாதனை
சேவாக் 104 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ளார். அதில் 8,500 ரன்களும், 23 சதம் அடித்துள்ளார். அதில் இரண்டு முச்சதமும் அடங்கும். இந்திய அணியில் முச்சதம் அடித்த முதல் வீரரும் அவர் தான். இரண்டு முச்சதம் அடித்த ஒரே இந்திய வீரரும் அவர் தான்.