கங்குலி பவுலிங்
இந்திய அணியின் இரண்டு தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் சச்சின், கங்குலி இருவருமே பேட்டிங்கில் கலக்கியதைப் போலவே அவ்வப்போது பந்துவீச்சிலும் கலக்குவார்கள். சச்சின் சுழற் பந்துவீச்சை தன் ஆயுதமாக வைத்திருந்த நிலையில், கங்குலி மித வேகப் பந்துவீச்சாளராக இருந்தார்.
முத்தரப்பு தொடர்
2004இல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகள் மோதிய முத்தரப்பு கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அந்த தொடரின் குரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியை தலா நான்கு முறை சந்தித்தன. அதில் ஜிம்பாப்வே அணியை இரு அணிகளும் எளிதாக வீழ்த்தி வந்தன.
இந்தியா - ஆஸி கடும் மோதல்
எனவே, தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே தான் கடும் மோதல் இருந்தது. குரூப் சுற்றில் முதல் இரண்டு சந்திப்புகளில் இந்தியா, ஆஸ்திரேலியா தலா ஒரு முறை வெற்றி பெற்று இருந்தன. மூன்றாவது போட்டி சிட்னியில் நடைபெற்றது. இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.
லக்ஷ்மன், யுவராஜ் சிங் சதம்
சச்சின் இல்லாத நிலையில், கங்குலி, பார்த்திவ் பட்டேல் துவக்கம் அளித்தனர் கங்குலி 1, பார்த்திவ் 28 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தனர். டிராவிட் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். விவிஎஸ் லக்ஷ்மன் 106, யுவராஜ் சிங் 139 ரன்கள் குவித்து இந்திய அணியை காப்பாற்றினர்.
மழை குறுக்கிட்டது
இந்தியா நிர்ணயித்த 50 ஓவர்களில் 296 ரன்கள் குவித்தது. இந்தியா எப்படியும் இந்தப் போட்டியில் வெல்லும் என எதிர்பார்த்த நிலையில், மழை குறுக்கிட்டது. அதனால் போட்டி 34 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு 225 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆஸ்திரேலியா சேஸிங்
ஆஸ்திரேலிய அணியில் கில்கிறிஸ்ட் 72 பந்துகளில் 95 ரன்கள் குவித்தார். பாண்டிங் 42 ரன்கள் எடுத்தார். டேமியன் மார்ட்டின் 0 என ஆஸ்திரேலியா 23 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து 4 விக்கெட்கள் இழந்து இருந்தது. இந்திய அணி டாப் ஆர்டரில் நான்கு விக்கெட்களை வீழ்த்தினாலும், ஆஸ்திரேலிய அணி 60 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது.
இந்தியா பந்துவீச்சு
இந்திய அணியில் இர்பான் பதான், பாலாஜி, அஜித் அகர்கர் மற்றும் முரளி கார்த்திக் என நான்கு பந்துவீச்சாளர்கள் மட்டுமே. ஐந்தாவது பந்துவீச்சாளராக பத்து ஓவர்களை பகுதி நேர பந்துவீச்சாளர்கள் தான் நிரப்ப வேண்டும். கங்குலி இரண்டு ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து இருந்தார்.
கங்குலி சவால்
23வது ஓவருக்கு பின் தானே பந்தை கையில் எடுத்தார். ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும் என்றால் விக்கெட் எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலை. குறிப்பாக உலகின் சிறந்த ஒருநாள் போட்டி பினிஷராக அந்த காலகட்டத்தில் வலம் வந்த மைக்கேல் பெவன் விக்கெட்டை வீழ்த்த வேண்டும். சவாலை ஏற்று ஆஸ்திரேலிய அணியை திணற வைத்தார் கங்குலி.
விக்கெட் வேட்டை
26வது ஓவரில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்,-ஐ வீழ்த்தினார். அடுத்து 30வது ஓவரின் கடைசி பந்தில் ஆபத்தான மைக்கேல் பெவனை ஏமாற்றி பவுல்டு அவுட் செய்தார். அது கங்குலியின் சிறந்த பந்துகளில் ஒன்றாக அமைந்தது. 32வது ஓவரில் இயான் ஹார்வியை ரன் அவுட் செய்தா கங்குலி, அதே ஓவரில் மைக்கேல் கிளார்க் விக்கெட்டையும் வீழ்த்தினார்.
சிக்கலில் ஆஸ்திரேலியா
தனது ஏழு ஓவர்களில் கங்குலி 41 ரன்கள் கொடுத்து 3 முக்கிய மிடில் ஆர்டர் விக்கெட்கள் மற்றும் ஒரு ரன் அவுட் செய்தார். கங்குலி தன் கடைசி ஓவரை முடிக்கும் போது ஆஸ்திரேலியா கையில் 2 விக்கெட்களுடன் 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்தது.
திரில்லர் போட்டி
33வது ஓவரில் அகர்கர் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. பாலாஜி வீசினார். கடைசி 3 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் பிரெட் லீ ஒரு சிக்ஸ் அடித்து தன் அணியை கடைசி ஒரு பந்து மீதமிருக்கும் நிலையில் வெற்றி பெற வைத்தார். அன்று இந்தியா வென்று இருந்தால் கங்குலியின் மறக்க முடியாத பந்துவீச்சாக அது மாறி இருக்கும்.