Recommended Video
கங்குலி கேப்டன் ஆன சமயம்
2000ஆம் ஆவது ஆண்டில் சௌரவ் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக ஆனார். அப்போது இந்திய அணி கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிகளை பெற்று வந்தது. அப்போது 2002ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் இலங்கையில் நடந்தது. அதில் இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருந்தது.
இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா
அண்டை நாடு என்பதால் ஆடுகளங்கள் இந்திய சூழ்நிலையை போன்றே இருக்கும். அதை பயன்படுத்தி இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. சனத் ஜெயசூர்யா தலைமையில் ஆடிய இலங்கை அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இலங்கை ஆட்டம்
கங்குலி தலைமையில் முதல் ஐசிசி தொடர் வெல்ல அருமையான வாய்ப்பு கிடைத்தது. பரபரப்பான அந்த இறுதிப் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியில் ஜெயசூர்யா டக் அவுட் ஆனார். ஜெயவர்தனே மட்டும் 77 ரன்கள் எடுத்தார்.
ரஸ்ஸல் அர்னால்ட் நிதானம்
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் ரஸ்ஸல் அர்னால்ட் படு நிதான ஆட்டம் ஆடி வந்தார். டெஸ்ட் போட்டி போல பந்தை வீணடித்து ஆடி வந்தார். 101 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டகால்டி வேலை
அவர் பேட்டிங் செய்து வந்த போது இடையே இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு உதவும் வகையில் ஒரு டகால்டி வேலை செய்தார். ஒரு பந்தை லேட் கட் அடித்த அவர், இரண்டு, மூன்று அடிகள் பிட்ச்சில் முன்னே நகர்ந்தார். ஏற்கனவே, மோசமாக இருந்த பிட்ச்சை இன்னும் மோசமாக சிதைக்கும் முயற்சியாக இது பார்க்கப்பட்டது.
சுழற் பந்துவீச்சு திட்டம்
இந்திய அணி சுழற் பந்துவீச்சை வைத்தே இலங்கை ரன் குவிப்பை தடுத்த நிலையில், பிட்ச்சை இன்னும் மோசமாக சிதைத்தால், அடுத்து இலங்கை அணியின் பந்துவீச்சில் முத்தையா முரளிதரன் மற்றும் பிற சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து இந்திய அணியை திணற வைக்கவே இந்த திட்டம் என கருதப்பட்டது.
பொங்கிய கங்குலி
ரஸ்ஸல் அர்னால்ட் இயல்பாக இல்லாமல் வேண்டும் என்றே பிட்ச்சை சிதைப்பதாக கருதிய இந்திய அணி கேப்டன் கங்குலி, உடனே ஓடி வந்து ரஸ்ஸல் அர்னால்ட்டை கடுமையாக எச்சரித்தார். அம்பயர் தான் நியாயமாக எச்சரிக்கை செய்திருக்க வேண்டும். அதனால், அப்போது பரபரப்பு எழுந்தது.
பரபரப்பான சூழல்
கங்குலியை தொடர்ந்து அருகே இருந்த டிராவிட், பிட்ச்சின் மோசமான பகுதியில் ஓட வேண்டாம் ரஸ்ஸல் அர்னால்டை எச்சரித்தார். அந்த காட்சிகள் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அர்னால்ட் ஏமாற்ற முயல்வதாக ரசிகர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
போட்டி தடை
அந்தப் போட்டியில் இலங்கை அணி 222 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து இந்தியா ஒரு விக்கெட் இழந்து 38 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. ரிசர்வ் நாளிலும் மழை பெய்ததால் இரு அணிகளும் அப்போது சாம்பியன்ஸ் ட்ராபியை பகிர்ந்து கொண்டன.
அர்னால்ட் என்ன சொன்னார்?
அது பற்றி இப்போது பேசிய ரஸ்ஸல் அர்னால்ட் தன வெறும் 3 அடி மட்டுமே எடுத்து வைத்தேன் என்றும், அதற்கு கங்குலி எச்சரிக்கை செய்ததாகவும், எல்லாமே விளையாட்டு தர்மத்துக்கு உள்ளாகவே நடந்ததாக கூறினார். இந்திய ரசிகர்கள் அதை அப்படி எடுத்துக் கொள்ளவில்லை என்பதே உண்மை.