பிசிசிஐ தேர்தல்
பிசிசிஐ அமைப்புக்கு பல ஆண்டுகள் கழித்து தேர்தல் நடைபெற உள்ளது. உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் சுமார் 3 ஆண்டுகள் இருந்த பிசிசிஐ இனி தேர்தல் நடத்தி, நீதிமன்றம் ஒப்புதல் அளித்த விதிகளின் படி சுயமாக செயல்படலாம்.
அரசியல் லாபி
இந்த நிலையில், திங்கள் அன்று தேர்தலுக்கு போட்டியிடுபவர்கள் விண்ணப்பம் அளிக்க கடைசி நாள். அதற்கு முன்பாகவே, பிசிசிஐ அதிகாரக் குழுக்கள் மற்றும் மாநில கிரிக்கெட் அமைப்புகள் அடங்கிய அரசியல் லாபி யார், யாரை எந்தெந்த பதவிக்கு அமர்த்தலாம் என முடிவு செய்து விட்டது.
தலைவர் பதவிக்கு போட்டி
மற்ற பதவிகளுக்கு யாரை நியமிக்கலாம் என்பதில் சிக்கல் இல்லாத நிலையில், தலைவர் பதவிக்கு கங்குலி மற்றும் முன்னாள் தலைவர் சீனிவாசன் ஆதரவு பெற்ற பிரிஜேஷ் பட்டேல் பெயர்கள் விவாதிக்கப்பட்டு உள்ளது.
ஐபிஎல் பேரம்
பிரிஜேஷ் பட்டேலை சில மாநில கிரிக்கெட் அமைப்புகள் தலைவர் பதவிக்கு ஒப்புக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. எனவே, அவருக்கு ஐபிஎல் அமைப்பின் தலைவர் பதவியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கங்குலி தலைவர் ஆகிறார்
அதனால், கங்குலியை பிசிசிஐ தலைவர் ஆக்க அனைவரும் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. போட்டியின்றி கங்குலி தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட இருக்கிறார். ஆனால், பதவியில் அமர்ந்தாலும் அதில் ஒரு சிக்கல் உள்ளது.
அந்த கண்டம்
மற்ற பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் அனைவரும் 33 மாதம் பதவியில் இருப்பார்கள் எனும் நிலையில், கங்குலியால் பத்து மாதங்கள் மட்டுமே தலைவர் பதவியில் நீடிக்க முடியும். அதன் பின் அவர் பதவியில் இருக்க முடியாது.
விதிகள் என்ன?
அதற்கு காரணம் சில விதிகள் தான். அதன்படி, பிசிசிஐ மற்றும் அதன் மாநில அமைப்புகளின் அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருக்கலாம். அதன் பின் மூன்று ஆண்டு காலத்திற்கு எந்த பதவியிலும் இருக்க முடியாது.
வங்காள கிரிக்கெட் அமைப்பு
கங்குலி வங்காள கிரிக்கெட் அமைப்பின் தலைவர் பதவியில் இருக்கிறார். அங்கே தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பதவியில் இருக்கும் நிலையில், பிசிசிஐ தலைவர் பதவியில் அவரால் பத்து மாதங்கள் மட்டுமே இருக்க முடியும்.
இது தான் காரணமா?
இந்த காரணத்தால் தான் பெரிய அரசியல் பின்புலம் இல்லாத கங்குலியை பிசிசிஐ தலைவராக்க ஒப்புக் கொண்டு இருப்பார்கள் என கருதப்படுகிறது. இப்போதைக்கு அனைவரின் ஆதரவு பெற்ற ஒருவரை தலைவர் ஆக்குவதே முக்கியம் என்பதால், குறைந்த காலமே பதவி வகிக்கக் கூடிய கங்குலிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
மீண்டும் அரசியல் லாபி தான்
கங்குலி பத்து மாதங்கள் கழித்து பதவி விலகிய பின், மீண்டும் தலைவர் பதவிக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்படும். அப்போது அரசியல் லாபி அதிகாரம் கையில் இருப்பதால் தங்களுக்கு விருப்பமானவர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.