இந்திய அணியின் பயிற்சியாளர்
முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் கேரி கிர்ஸ்டன் இந்தியாவின் பயிற்சியாளராக இருந்த க்ரெக் சாப்பலுக்கு மாற்றாக கடந்த 2007ல் பொறுப்பேற்றார். இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் போன்ற மூத்த வீரர்கள், விராட் கோலி போன்ற இளவயது வீரர்களும் இருந்த நிலையில், இருவருக்கும் பாலமாக அணியை சிறப்பாக வழி நடத்தினார் கிர்ஸ்டன்.
ஆரம்பத்தில் கண்டறிந்த கிர்ஸ்டன்
கடந்த 2009ல் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை முன்னிலைக்கு கொண்டு வந்தது, 2011ல் ஒருநாள் உலக கோப்பையை வென்றது என்று இவரது தலைமையின்கீழ் இந்திய அணி பல்வேறு கிரீடங்களை சூட்டிக் கொண்டது. இந்நிலையில் 2008ல் அணியில் தனது முதல் போட்டியை விளையாடிய விராட் கோலிக்கு சிறப்பான திறமைகள் இருந்ததை ஆரம்பத்திலேயே தான் கண்டறிந்ததாக கிர்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை வழங்கிய கிர்ஸ்டன்
தி ஆர்.கே ஷோவிற்காக பேசிய கிர்ஸ்டன், விராட் கோலி அந்த சமயத்தில் தன்னுடைய திறமைகளை சரிவர பயன்படுத்தவில்லை என்பதையும் கண்டறிந்து அவருக்கு பல கட்டங்களில் ஆலோசனைகளை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். அவருடைய ஆட்டத்தில் இருந்த ரிஸ்க்கை வெளியேற்றி அவரை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல தான் உதவியதாகவும் கூறியுள்ளார்.
கிர்ஸ்டன் ஆலோசனை
இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சிக்ஸ் அடிப்பதற்காக அவர் பந்துகளை தூக்கி அடித்துக் கொண்டிருந்த நிலையில், மைதானத்தை ஒட்டி பந்துகளை அடித்து ஆடுமாறு தான் ஆலோசனை கூறியதாகவும் மேலே அடித்தால் அதில் அதிக ரிஸ்க் உள்ளதை எடுத்து கூறியதாகவும் கிர்ஸ்டன் தெரிவித்துள்ளார். இதையடுத்து கொல்கத்தாவில் நடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி கோலி சதமடித்ததையும் கிர்ஸ்டன் நினைவு கூர்ந்தார்.