மகளிர் அணிக்கு புதிய பயிற்சியாளர்
மிதாலி ராஜ் - ரமேஷ் பவார் விவகாரத்திற்குப் பின் மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர் தேவை என்ற முடிவுக்கு வந்த பிசிசிஐ, ரமேஷ் பவாரின் தற்காலிக பதவி முடிவுக்கு வந்த உடன் அதற்கான நடைமுறைகளை துவங்கியது.
கேரி கிர்ஸ்டனுக்கு வாய்ப்பு
சுமார் 28 பேர் இந்த பதவிக்கு விண்ணப்பித்தனர். அதில் கேரி கிர்ஸ்டன், டபுள்யூ.வி.ராமன், வெங்கடேஷ் பிரசாத் ஆகியோரின் பெயர் கடைசி கட்ட பரிசீலனையில் இருந்தது. 2011 உலகக்கோப்பை வென்று கொடுத்த கேரி கிர்ஸ்டன் இந்த பதவிக்கு முதல் விருப்பமாக இருந்தார்.
ஐபிஎல் பணியை விட மறுப்பு
எனினும், சமீபத்தில் பெற்ற ஐபிஎல் அணியான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பயிற்சியாளர் பதவியை விட்டு விலகினால், இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் பதவி கிடைக்கும் என்ற சூழல் நிலவியது. கேரி அதற்கு மறுத்துள்ளார். இதையடுத்து டபுள்யூ.வி.ராமன் பயிற்சியாளர் பதவிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
பிசிசிஐ பதவி முக்கியம்
ஐபிஎல் அணிகளில் பதவியில் இருக்கும் யாரும், பிசிசிஐ-யின் மற்ற பதவிகளில் இருக்கக் கூடாது என்ற புதிய விதி 2017 முதல் அமலில் உள்ளது. அதன் படி ராகுல் டிராவிட், பராஸ் மாம்ப்ரே, பேட்ரிக் ஃபர்ஹட், பாரத் அருண், சங்கர் பாசு உட்பட பலர் பிசிசிஐ அளித்த பதவியில் இருப்பதால் ஐபிஎல் அணிகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டனர்.