குவியும் விமர்சனம்
கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல் மற்றும் இந்திய அணி என் இரண்டிலுமே பேட்டிங், பவுலிங் என ஹர்திக் பாண்ட்யா சொதப்பி வருகிறார். அவர் பவுலிங் வீசாமல் இருப்பது தான் தற்போது பெரும் பிரச்னையாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு ஓவர் கூட வீசாமல் இருந்த பாண்ட்யாவுக்கு, டி20 உலகக்கோப்பை தொடரில் நம்பி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் மொத்தமாக 4 ஓவர்களை மட்டுமே வீசிய அவர், 40 ரன்களை வாரி வழங்கி ஒரு விக்கெட்டை கூட எடுத்துக்கொடுக்கவில்லை.
பாண்ட்யாவை ஒதுக்கிய பிசிசிஐ
இதன் விளைவாக தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து பாண்ட்யா ஒதுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஐபிஎல்-ல் கலக்கி வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு திரும்புவது சந்தேகம் தான் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
ஆதரவுக்குரல் கொடுத்த கம்பீர்
இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆதரவாக கம்பீர் களமிறங்கியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், அணியில் பேட்டிங் வரிசையில் 6வது வீரரை ஒரே நாளில் தேடி கண்டுபிடித்துவிட முடியாது. அதே போல அந்த இடத்திற்கு மாற்று வீரரையும் தேர்ந்தெடுத்துவிட முடியாது. அந்தவகையில் ஹர்திக் பாண்ட்யாவை குறைத்து மதிப்பிடாதீர்கள். பாண்டா இனி அவ்வளவு தான், கம்பேக் கொடுக்க மாட்டார் என ஏற்கனவே விமர்சனங்கள் எழத்தொடங்கிவிட்டன. ஆனால் அதற்கு எதிர்மறையாக தான் அவர் உள்ளார்.
தேர்வுமுறை எப்படி இருக்க வேண்டும்
ஹர்திக் தன்னை இன்னமும் ஃபிட்டாகவே வைத்துள்ளார். தொடர்ந்து பவுலிங் பயிற்சி செய்கிறார். அவருக்கு வயது உள்ளது. நிச்சயம் ஒரு நாள் வாய்ப்பு பெறுவார். இடைபட்ட காலங்களில் வேறு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது தவறில்லை. ஆனால் அவர்களுக்கு தொடர்ந்து விளையாட வாய்ப்பு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் அவர்களின் முழு திறமை தெரியவரும். ஒவ்வொரு தொடருக்கும் வீரர்களை மாற்றிக்கொண்டே இருந்தால் சிறந்த ப்ளேயிங் 11-ஐ கண்டறியவே முடியாது. வீரர்களிடம் நம்பி பொறுப்பை கொடுக்கும்படி தேர்வுகள் இருக்க வேண்டியது அவசியம் என கம்பீர் தெரிவித்துள்ளார்.