தோனி - கம்பீர் மோதல்
முன்னாள் கேப்டன் தோனி - முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் இடையே ஆன விரிசல் பல ஆண்டுகளாக அனைவரும் அறிந்த ஒன்று தான். கம்பீர் அணியில் வாய்ப்பை இழந்ததே தோனியால் தான் என்ற பேச்சு இன்றளவிலும் உள்ளது.
தொடர் விமர்சனம்
கம்பீரும் அந்த கருத்தை பல முறை சூசகமாக தன் பேட்டிகளில் கூறி இருக்கிறார். தோனியை இவர் அளவிற்கு வேறு யாரும் விமர்சனம் செய்ததில்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு அவரை வெளுத்து வாங்கி வருகிறார்.
சுழற்சி முறை விமர்சனம்
2012 ஆஸ்திரேலியா - இலங்கை - இந்தியா ஆடிய முத்தரப்பு தொடரில் கம்பீருக்கு சுழற்சி முறையில் வாய்ப்பளித்தார் அப்போதைய கேப்டன் தோனி. அப்போது தன் எதிர்ப்பை பதிவு செய்தார் கம்பீர்.
வாய்ப்பை இழந்தார்
அதன் பின் 2013ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணியில் தன் வாய்ப்பை இழந்தார். அதன் பின் அவரால் அணிக்குள் நுழைய முடியவில்லை. சிறந்த பேட்ஸ்மேன் என்ற பெயரை எடுத்தாலும் அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
உலகக்கோப்பை நாயகன்
அதே சமயம், தோனியின் தலைமையில் இந்தியா வென்ற இரண்டு உலகக்கோப்பை போட்டிகளிலும் அதிக ரன்கள் அடித்த வீரர் கௌதம் கம்பீர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2007 டி20 உலகக்கோப்பை இறுதியில் 75 ரன்கள் குவித்தார்.
2011 உலகக்கோப்பை இறுதி
2011 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் சேஸிங்கில் 97 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் 3 ரன்களில் சதத்தை தவறவிட்டதைப் பற்றித் தான் இப்போது புகார் கூறி இருக்கிறார்.
சிறப்பான கூட்டணி
அந்த இறுதிப் போட்டியில் சச்சின், சேவாக் ஆட்டமிழந்த பின், தோனியுடன் கூட்டணி அமைத்து ஆடி வந்தார் கௌதம் கம்பீர். இருவரும் இணைந்து 109 ரன்கள் சேர்த்தனர். கம்பீர் 97 ரன்களை எட்டி இருந்தார். அப்போது தோனி என்ன நடந்தது என்பது பற்றி கம்பீர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
தோனி என்ன சொன்னார்?
கம்பீர் 97 ரன்களை எட்டிய போது தோனி, அவரிடம், "இன்னும் 3 ரன்கள் தான். அதன் பின் உங்கள் சதம் நிறைவடையும்" என்று கூறி இருக்கிறார். அது வரை தன் ஸ்கோரை கணக்கிடாமல் ஆடி வந்தார் கம்பீர்.
பதற்றமடைந்த கம்பீர்
இலங்கை அணியின் ஸ்கோரை வீழ்த்த வேண்டும் என்பதை மட்டுமே மனதில் வைத்து ஆடி வந்த கம்பீர், தோனியின் பேச்சால் சதம் அடிக்க வேண்டும் என்று பதற்றமடைந்து அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார்.
அந்த 3 ரன்கள்
இலங்கை அணியின் ஸ்கோரை மட்டுமே மனதில் வைத்து ஆடி இருந்தால், நான் சதம் கடந்து இருப்பேன். அந்த 3 ரன்கள் தன் வாழ்நாள் முழுவதும் துரத்தும் என்று நினைத்தேன், இன்றும் பலர் தன்னை ஏன் அந்த 3 ரன்களை அடித்து சதத்தை நிறைவு செய்யவில்லை என கேட்கிறார்கள் என்றார் கம்பீர்.