உலகக்கோப்பை அணி
இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான அந்த அணியில் சீனியர் வீரர்கள், இளம் வீரர்கள் என பாதிக்கு பாதியாக பிரிக்கப்பட்டு ஒரு கலவையான அணியாக உருவாக்கப்பட்டுள்ளது.
தோனி சேர்ப்பு
இதில் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத சுவாரஸ்ய விஷயம் என்னவென்றால் இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி நியமிக்கப்பட்டிருப்பது தான். கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அணியில் உள்ள போது, வீரர்களுக்கு தோனி அறிவுரைகளை வழங்கவுள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கம்பீரின் கருத்து
இந்நிலையில் தோனியை ஆலோசகராக நியமித்தது குறித்து முன்னாள் வீரர் கம்பீர் பேசியுள்ளார். அதில் அவர், இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் வலுவாக உள்ளது. கோலி, ரவி சாஸ்திரி இருக்கும் போதிலும், தோனியை கொண்டு வந்திருப்பது மிகப்பெரும் விஷயமாக பார்க்கிறேன். தோனியின் திறமையை கருத்தில் கொண்டு அவரை ஆலோசகராக நியமித்திருக்க மாட்டார்கள். ஏன் என்றால் அனைத்து வீரர்களுக்கும் ஏற்கனவே அற்புதமான திறமைகள் உள்ளன.
கடும் அழுத்தங்கள்
நெருக்கடியான சூழல்களில் பிரஷரை சமாளிப்பதற்காகவே தோனி கொண்டு வரப்பட்டிருப்பார். ஐசிசி போன்ற மிக முக்கியமான தொடர்களில் அழுத்தங்கள் காரணமாக தான் இந்தியா பல முறை தோல்வியை சந்தித்து வருகிறது. எனவே அந்த அழுத்தங்களை சமாளிப்பது எப்படி என்பது குறித்து அறிவுரை கூறவே தோனி நியமிக்கப்பட்டிருக்கலாம்.
தோனியின் பணி
சர்வதேச கிரிக்கெட்டில் கடும் அழுத்தங்களுக்கு இடையேயும் வெற்றி தேடிக்கொடுத்தவர் தோனி. அதே வேளையில் உலகக்கோப்பை இந்திய அணியில் இளம் வீரர்கள் அதிகப்படியாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சூழ்நிலையை எப்படி கையாள்வது, அழுத்தங்களை மீறி எப்படி நன்கு செயல்படுவது போன்றவற்றை தோனி கற்றுக்கொடுப்பார் என நம்புகிறேன்.
தோனி தலையிட முடியாது
வீரர்களின் திறமை விஷயங்களில் தோனி எந்தவித தலையீடுகளையும் செய்ய முடியாது. ஏனென்றால் ரவிசாஸ்திரி, விக்ரம் ரத்தோர் போன்ற பயிற்சியாளர்கள் அங்கு உள்ளனர். எனவே வீரர்களுக்கு தனது அனுபவத்தை பகிர்ந்து அவர்களை நிதானப்படுத்துவதற்காகவே தோனி அழைக்கப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன் என கம்பீர் தெரிவித்துள்ளார். எதுஎப்படியோ, தோனி மீண்டும் இந்திய அணியில் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.