நான்காம் இடம்
இந்திய அணியில் சுமார் இரண்டு ஆண்டுகளாக நிலையில்லாமல் இருப்பது நான்காவது வரிசை பேட்ஸ்மேன் தான். யுவராஜ் சிங் பார்ம் அவுட் ஆன பின், அந்த இடத்துக்கு பலரையும் முயன்று பார்த்தது கோலி - ரவி சாஸ்திரி கூட்டணி.
யாரும் சரியாக ஆடவில்லை
தினேஷ் கார்த்திக், அம்பதி ராயுடு, விஜய் ஷங்கர், ராகுல், தோனி, பண்டியா என பலரையும் முயன்று பார்த்தும் யாரும் அந்த இடத்தில் சரியாக ஆடவில்லை. தற்போது அந்த இடத்திற்கு தோனிக்கு மாற்றாக அணியில் இணைந்த ரிஷப் பண்ட் ஆடி வருகிறார்.
ரிஷப் பண்ட் சொதப்பல்
விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பண்ட், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சரியாக ரன் குவிக்கவில்லை. டி20 தொடர், ஒருநாள் போட்டிகள் தொடர், டெஸ்ட் தொடர் என அனைத்தையும் சேர்த்து 10 இன்னிங்க்ஸ்களில் 199 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார் பண்ட்.
48 பந்துகளில் 91 ரன்கள்
இந்த நிலையில் தான், இந்தியா ஏ அணியில் இடம் பெற்ற விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக 48 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார். தன் இன்னிங்க்ஸில் 7 சிக்ஸர்கள் விளாசி இருந்தார் அவர்.
மாற்றம் வேண்டும்
அதனால், இயல்பாகவே பலரும் பார்ம் இழந்து தவிக்கும் இளம் வீரர் ரிஷப் பண்ட்டை நீக்கி விட்டு, சஞ்சு சாம்சனை அணியில் விக்கெட் கீப்பராக சேர்க்கலாம் என கூறி வருகின்றனர். அதற்கான வாய்ப்பும் உள்ளது.
|
ஹர்பஜன் சிங் பாராட்டு
அந்த வரிசையில் ஹர்பஜன் சிங், ஏன் சஞ்சு சாம்சனை ஒருநாள் போட்டிகள் அணியில் நம்பர் 4 ஆக பயன்படுத்தக் கூடாது? அவரிடம் நல்ல டெக்னிக் உள்ளது என்று கூறி பாராட்டி இருந்தார்.
|
நிலாவில் பேட்டிங்
அதற்கு பதில் அளித்து ட்வீட் போட்ட கௌதம் கம்பீர், இப்போது தெற்கத்திய நட்சத்திரம் சஞ்சு சாம்சன் இருக்கும் பார்முக்கு அவர் நிலவின் தென் துருவத்தில் கூட பேட்டிங் செய்வார் என்று ஒரேடியாக புகழ்ந்து இருந்தார்.
பாராட்டிய கம்பீர்
மேலும், விக்ரம் லேண்டரில் இந்த அதிசய பேட்ஸ்மேனை அழைத்து செல்ல இடம் இருக்குமா? சிறப்பாக ஆடினீர்கள் சஞ்சு, தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக 48 பந்துகளில் 91 ரன்கள் என்று கூறி பாராட்டி இருந்தார்.
எல்லை மீறிய பாராட்டு
நேற்று இந்தியா நிலவின் தரைப் பகுதியில் விக்ரம் லேண்டரை தரை இறக்க முயற்சி செய்து தோல்வி அடைந்தது, அதற்கு முந்தைய தினம் இந்த கருத்தை கூறி, ஒரேடியாக நிலவில் வைத்து சஞ்சு சாம்சனை பாராட்டி இருந்தார் கம்பீர்.
|
நன்றி கம்பீர்!
கம்பீர் பதிவின் கீழே நன்றி கூறும் வகையில், கை எடுத்து கும்பிடும் ஈமோஜி போட்டு ட்வீட் போட்டுள்ளார் சஞ்சு சாம்சன். நீண்ட காலமாகவே சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டும், இந்திய அணியில் இடம் பெற முடியாத நிலையில் இருக்கிறார். இந்த முறை அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா?