ஆஸ்திரேலிய முத்தரப்பு தொடர்
ஆஸ்திரேலியாவில் 2012இல் சிபி சீரீஸ் என்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்றன. அந்த தொடருக்கு முன் தோனி கம்பீரிடம் தன் அணித் திட்டம் பற்றி பேசியுள்ளார்.
மூன்று மூத்த வீரர்கள் இல்லை
தன் திட்டப்படி, கம்பீர், சேவாக் மற்றும் சச்சின் ஆகிய மூத்த வீரர்கள் மூவரும் ஒரே நேரத்தில் அணியில் ஆட முடியாது எனக் கூறியுள்ளார். அதற்கு 2015 உலகக்கோப்பை அணிக்கு தயாராகி வருவதாக காரணம் கூறியுள்ளார் தோனி. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் கம்பீர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் அடுத்த உலகக்கோப்பை அணியில் ஆட மாட்டீர்கள் எனக் கூறுவதை நான் இதுவரை கேள்விப் பட்டதே இல்லை என கம்பீர் ஆச்சரியம் அடைந்துள்ளார்.
உலகக்கோப்பை தான் காரணம்
அப்போது ஆஸ்திரேலியாவில் நடந்த 2015 உலகக்கோப்பை அணிக்கு 2012இல் நடந்த முத்தரப்பு தொடரை தோனி பயன்படுத்த எண்ணி, இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க முடிவு செய்தார். அதற்காக இந்தியாவின் முன்னணி வீரர்கள் மூவரை ஒதுக்க முடிவு செய்தார் என்பதும், அவர்கள் அடுத்து மூன்று ஆண்டுகள் கழித்து நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் ஆட மாட்டார்கள் எனக் கூறியதும் சற்று அதிர்ச்சியாகவே இருக்கிறது.
ஆனால் நடந்தது என்ன?
இப்படி தொடர் துவங்கும் முன் பேசிய தோனி அந்த தொடரில் பின் என்ன செய்தார் என்பதையும் சுட்டிக் காட்டினார் கம்பீர். ஒரு கட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிலையில் ஹோபார்ட் போட்டியில், சச்சின், சேவாக், கம்பீர் மூவரையும் களமிறக்கி ஆட வைத்துள்ளார் தோனி. அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
கம்பீர் காட்டமான பதிலடி
இது பற்றி கருத்து தெரிவித்த கம்பீர், "முதலில் மூவரும் ஒன்றாக ஆட முடியாது என்றார். பின்னர் மூவரையும் ஒன்றாக ஆட வைத்தார். ஒன்று முதலில் எடுத்த முடிவு தவறு. அல்லது இரண்டாவதாக எடுத்த முடிவு தவறு. ஒரு கேப்டனாக அவர் அப்படி முடிவு எடுத்தார். எங்கள் மூவருக்கும் அது அதிர்ச்சியாக இருந்தது" எனக் குறிப்பிட்டார்.
சேவாக் முன்பு கூறினார்
சேவாக் இதே நிகழ்வுகள் குறித்து முன்பு தனது அனுபவத்தை கூறி இருந்தார். "தோனி அணிக் கூட்டத்தில் என்னிடமும், கம்பீர் மற்றும் சச்சினிடமும், அடுத்த உலகக்கோப்பைக்கு இளைஞர்கள் தயாராகும் வகையில் அனைத்து போட்டிகளிலும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறினார். அப்போது தான் இங்குள்ள ஆடுகளம் குறித்து அவர்களுக்கு புரியும் என்றார்". இவ்வாறு சேவாக் கூறி இருந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த தொடரில் இந்தியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை. ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இறுதியில் மோதின. ஆஸ்திரேலியா அந்த தொடரில் வெற்றி பெற்றது.