அக்டோபர் 17
டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடர் வருகிற அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14ஆம் தேதி முடிவடைகிறது. போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறுகிறது. முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகளை நடத்தப்பட உள்ளது. போட்டிகள் அனைத்தும் அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும். இதில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், பாப்புவா நியூ கினியா ஆகிய 8 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து மோதுகின்றன. இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும்.
12 அணிகள்
இதில், குரூப் 'ஏ'வில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா அணிகளும், குரூப் 'பி'-யில் வங்கதேசம், ஸ்காட்லாந்து, பாப்புவா நியூ கினியா ஆகிய அணிகளும் மோதுகின்றன. ஐசிசி டி20 தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்த அணிகள் இரண்டாவது சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டது. முதல் சுற்றில் வெற்றிபெற்ற 4 அணிகளும் சூப்பர் 12 சுற்றில் பங்கேற்கும். அக்டோபர் 24ஆம் தேதி துவங்கும் இரண்டாவது சுற்றில் மொத்தம் 30 போட்டிகள் நடைபெறவுள்ளது. 12 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய மைதானங்களில் விளையாடுகின்றன. அதன்பிறகு மூன்று பிளே ஆஃப் சுற்று, இரண்டு அரையிறுதி, ஒரு பைனல் நடைபெறும். இதற்கான அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியா vs பாகிஸ்தான்
குரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வின்னர் குரூப் ஏ, ரன்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அதேபோல், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ரன்னர் குரூப் ஏ, வின்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில், இந்திய அணி வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், மாலை 6 மணிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இதில், இந்தியா பங்கேற்கும் குரூப் 2 பிரிவின் அனைத்து போட்டிகள் மற்றும் இந்தியா மோதும் ஆட்டங்கள் லிஸ்ட் இங்கே,
சூப்பர் 12 - குரூப் 2 போட்டிகள் விவரம்
இந்தியா vs பாகிஸ்தான் - 24 அக்டாபர், 18:00, துபாய்
ஆப்கானிஸ்தான் vs B1 - 25 அக்டாபர், 18:00, ஷார்ஜா
நியூசிலாந்து vs பாகிஸ்தான் - 26 அக்டாபர், 18:00, ஷார்ஜா
A2 vs B1 - 27 அக்டாபர், 18:00, அபுதாபி
ஆப்கானிஸ்தான் vs பாகிஸ்தான் - 29 அக்டாபர், 18:00, துபாய்
ஆப்கானிஸ்தான் vs A2 - 31 அக்டாபர், 14:00, அபுதாபி
இந்தியா vs நியூசிலாந்து- 31 அக்டாபர், 18:00, துபாய்
A2 vs பாகிஸ்தான் - 2 நவம்பர், 18:00, அபுதாபி
B1 vs நியூசிலாந்து - 3 நவம்பர், 14:00, துபாய்
இந்தியா vs ஆப்கானிஸ்தான் - 3 நவம்பர், 18:00, அபுதாபி
நியூசிலாந்து vs A2 - 5 நவம்பர், 14:00, ஷார்ஜா
இந்தியா vs B1 - 5 நவம்பர், 18:00, துபாய்
நியூசிலாந்து vs ஆப்கானிஸ்தான் - 7 நவம்பர், 14:00, அபுதாபி
B1 vs பாகிஸ்தான் - 7 நவம்பர், 18:00, ஷார்ஜா
இந்தியா vs A2 - 8 நவம்பர், 18:00, துபாய்
லேசுப்பட்ட அணி அல்ல
இந்திய அணி முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வது இத்தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறகு பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியையும் இந்தியா எதிர்கொள்கிறது. பாகிஸ்தானை விட, நியூசிலாந்து அணியே விராட் கோலி படைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம், ஆப்கானிஸ்தான் அணியும் லேசுப்பட்டதால். உலகத் தரம் வாய்ந்த ரஷீத் கான் அந்த அணியில் இருக்கிறார். அதுபோல், முகமது நபி உள்ளிட்ட சில சர்வதேச தரம் வாய்ந்த வீரர்களும் அந்த அணியில் இருக்கின்றனர். ஸோ, ஆப்கானிஸ்தான் அணியை சாதாரணமாக இந்தியா எடுத்துக் கொள்ளாது என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி குறித்து கெளதம் கம்பீர் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
குழப்பி விடுவார்கள்
அதில், "இந்தியாவுடன் முதல் போட்டியில் மோதுவதால், பாகிஸ்தானிடமிருந்து எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும், ஆனால், இப்போது உள்ள சூழலில், பாகிஸ்தானை விட இந்திய வலிமையாக உள்ளது என்பேன். டி20 வடிவ கிரிக்கெட்டில் யார் வேண்டுமானாலும் யாரையும் வெல்ல முடியும், ஏனெனில் இது மிகவும் தனிப்பட்ட வடிவ கிரிக்கெட்டாகும். இங்கு நாம் எந்த அணியையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உதாரணமாக, ஆப்கானிஸ்தானை நீங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ரஷித் கான் போன்றவர்கள் தொடரில் மிகப்பெரிய குழப்பங்களை உருவாக்கலாம். பாகிஸ்தானுடனும் அதே நிலைமை தான். அன்றைய தினம் சிறப்பானதாக இருந்தால், நிச்சயம் தாக்கம் ஏற்படுத்துவார்கள். இந்த டி20 உலகக் கோப்பையில் ஒரு அணியைப் பற்றி நீங்கள் பேச விரும்பினால், அது ஆப்கானிஸ்தானாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். அவர்கள் ரஷித் கான், முஜீப் மற்றும் முகமது நபி போன்ற வீரர்களைப் பெற்றிருக்கிறார்கள், நீங்கள் அவர்களை சாதாரண வீரர்களாக எடுத்துக்கொள்ள முடியாது. கடினமாக போராட வேண்டியிருக்கும். பல அணிகளுக்கு ஆப்கானிஸ்தான் சேதாரத்தை உருவாக்கலாம்" என்று கம்பீர் கூறியுள்ளார்.