பார்டர் - கவாஸ்கர் ட்ராபி
2000ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பார்டர் - கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் நடைபெற்றது. அந்த தொடரில் மிகச் சிறப்பாக ரன் குவித்து வந்தார் கௌதம் கம்பீர்.
ஷேன் வாட்சன் சீண்டல்
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவரது ரன் குவிப்பை தடுத்து நிறுத்த திட்டம் போட்ட ஆஸ்திரேலியாவில் ஷேன் வாட்சன், கம்பீரை தொடர்ந்து சீண்டும் வகையில் நடந்து கொண்டார்.
கம்பீர் பதிலடி
அவருக்கு பதிலடி கொடுக்க நினைத்த கம்பீர் ரன் ஓடும் போது, ஷேன் வாட்சன் மேல் தன் கைமுட்டியை இடித்தார். அதனால், அப்போது பரபரப்பு எழுந்தது. போட்டியின் முடிவில் கம்பீர் மீது புகார் அளிக்கப்பட்டது.
மேட்ச் ரெப்ரீ தடை
மேட்ச் ரெப்ரீ கிறிஸ் பிராடு அப்போது அவரை ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட தடை விதித்தார். அதனால், அந்த டெஸ்ட் தொடரின் கடைசிப் போட்டியில் சிறப்பான பார்மில் இருந்த கம்பீர் ஆட முடியாத நிலை ஏற்பட்டது.
காரணம் இவர் தான்
இந்த தடையில் இருந்து தப்பிக்கவோ அல்லது கடைசி டெஸ்ட் போட்டி வரை தடையை தள்ளிப் போடவோ வாய்ப்பு இருந்தது. ஆனால், பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் பேச்சைக் கேட்டு தான் தடையில் சிக்கியதாக தற்போது கூறி இருக்கிறார் கம்பீர்.
கங்குலி, சச்சின் அறிவுரை
கம்பீர் மீது புகார் எழுந்ததை அடுத்து அணியில் இருந்த அப்போதைய மூத்த வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலி, மேட்ச் ரெப்ரீ என்ன கேள்வி கேட்டாலும், குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டாம் என கூறி உள்ளனர்.
மன்னித்து விட்டு விடுவார்
ஆனால், மேட்ச் ரெப்ரீயை சந்திக்க சென்ற போது உடன் இருந்த பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு கூறி இருக்கிறார். அப்படி செய்தால் மேட்ச் ரெப்ரீ மன்னித்து விட்டு விடுவார் எனக் கூறி இருக்கிறார்.
தடை விதித்தார்
பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் வார்த்தையை நம்பி குற்றத்தை ஒப்புக் கொண்டு இருக்கிறார் கம்பீர். மேட்ச் ரெப்ரீ உடனடியாக அவருக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதித்தார்.
கம்பீர் என்ன சொன்னார்?
இது பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிட்ட கம்பீர், "அனைவரும் என்னை தவறை ஒப்புக் கொள்ள வேண்டாம் என கூறினர். அது மேட்ச் ரெப்ரீயுடனான என் முதல் அல்லது இரண்டாவது சந்திப்பு. அப்போது மூத்த வீரர்கள் உட்பட அனைவரும் என்னை குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டாம் என்றனர். ஆனால், மேட்ச் ரெப்ரீ அறைக்குள் நான் போகும் போது, கேரி கிர்ஸ்டன் குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு கூறினார்" என்றார்.
அதிக ரன்கள் குவித்தார்
அந்த தொடரின் கடைசி போட்டியில் ஆடும் வாய்ப்பை கம்பீர் இழந்தாலும், மூன்று போட்டிகளின் முடிவில் 463 ரன்கள் குவித்த அவர் தான் அந்த தொடரில் அதிக ரன் குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.