இந்திய அணியின் கேப்டன்கள்
2000மாவது ஆண்டுக்குப் பின் இந்திய அணியின் சிறந்த கேப்டன்கள் யார் என்றால் சௌரவ் கங்குலி, தோனி என்றே பலரும் கூறுவார்கள். சிலர் இவர்களோடு விராட் கோலியை ஒப்பிடுவார்கள். ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே போன்ற கேப்டன்களை மறந்து விடுவார்கள்.
கேப்டன் அனில் கும்ப்ளே
குறுகிய காலமே டெஸ்ட் அணி கேப்டனாக பதவி வகித்து இருந்தாலும் அனில் கும்ப்ளே வீரர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். அதன் காரணமாகவே பின்னர் அவருக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆர்பி சிங், கம்பீர்
முன்னாள் வீரர்கள் கௌதம் கம்பீர், ஆர்பி சிங் போன்றோர் கங்குலி, தோனி ஆகியோரின் கேப்டன்சியில் ஆடி இருந்தாலும், தாங்கள் ஆடியதில் சிறந்த கேப்டன் யார் எனக் கேட்டால் அனில் கும்ப்ளே தான் எனத் தயங்காமல் சொல்வார்கள்.
கம்பீர் என்ன சொன்னார்?
சமீபத்தில் ஸ்போர்ட்ஸ் தக் என்ற ஊடகத்துக்கு பேட்டி அளித்த கௌதம் கம்பீர், தன் காலத்தில் அனில் கும்ப்ளே தான் சிறந்த கேப்டன் என்றும், அவருக்காக தான் உயிரையும் கொடுக்க தயங்க மாட்டேன் என கூறி இருந்தார். அதற்கு காரணமான சம்பவம் பற்றியும் அவர் கூறினார்.
கும்ப்ளே சொன்ன வார்த்தை
"சேவாக்கும் நானும் இரவு உணவு உண்டு கொண்டு இருந்தோம். அப்போது வந்த கேப்டன் கும்ப்ளே, இந்த தொடர் முழுவதும் என்ன நடந்தாலும் நீங்கள் தான் துவக்கம் அளிக்கப் போகிறீர்கள். என்றார். நீங்கள் இருவரும் எட்டு டக் அவுட்கள் ஆனாலும் பரவாயில்லை என்றார்." என அந்த சம்பவம் பற்றி கூறினார் கம்பீர்.
உயிரை கொடுப்பேன்
"நான் அது போன்ற வார்த்தைகளை என் கேரியரில் யாரிடம் இருந்தும் கேட்டதில்லை. அதனால், நான் யாருக்காவது என் உயிரை கொடுக்க வேண்டும் என்றால், அது அனில் கும்ப்ளேவுக்கு தான். அந்த வார்த்தைகள் இன்னும் என் இதயத்தில் உள்ளது" என்று உணர்ச்சிவசப்பட்டார் கம்பீர்.
கம்பீர் ரன் குவிப்பு
அந்த தொடரில் கௌதம் கம்பீர் 6 இன்னிங்க்ஸ்களில் 463 ரன்கள் எடுத்தார். இரண்டு சதம், ஒரு அரைசதம் என பட்டையைக் கிளப்பினார். ஒரு இரட்டை சதமும் அடக்கம். அது தான் கம்பீரின் சிறந்த டெஸ்ட் தொடர் என்றும் கூறலாம்.
பல சாதனைகள் செய்திருப்பார்
தொடர்ந்து அனில் கும்ப்ளேவின் கேப்டன்சி பற்றி பேசிய கௌதம் கம்பீர், கங்குலி, தோனி அல்லது விராட் கோலி போல நீண்ட காலத்துக்கு அனில் கும்ப்ளே கேப்டனாக இருந்திருந்தால் அவர் மேலும் பல சாதனைகளை செய்து இருப்பார் என்றார். அவர் ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற கடினமான தொடர்களில் கேப்டனாக இருந்தார் என்றார்.
டிஆர்எஸ் இருந்திருந்தால்..
மேலும், டிஆர்எஸ் ரிவ்யூ கேட்கும் வாய்ப்பு அப்போது இருந்திருந்தால் கும்ப்ளே 900 விக்கெட்களும், ஹர்பஜன் சிங் 700 விக்கெட்களும் எடுத்திருப்பார்கள். அவர்கள் பல எல்பிடபுள்யூ வாய்ப்புகளை தவற விட்டனர். அவர்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் ஆடி இருந்தால் எதிரணிகள் 100 ரன்களை கூட தாண்டி இருக்காது என்றார் கம்பீர்.