2012 சிபி தொடர்
2012 சிபி தொடர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அந்த தொடரில் இருந்து தான் தோனி மற்றும் கம்பீர், சேவாக் இடையே லேசான மோதல் போக்கு துவங்கியது.
2015 உலகக்கோப்பைக்கு திட்டம்
2011 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி அடுத்து 2015 உலகக்கோப்பை தொடருக்கு திட்டமிட்டது. ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற இருக்கும் அந்த தொடரில் இளம் வீரர்களை தயார் செய்ய திட்டமிட்ட அப்போதைய கேப்டன் தோனி, ஆஸ்திரேலியவில் நடந்த முத்தரப்பு தொடரில் அதிக இளம் வீரர்களை பயன்படுத்த எண்ணினார்.
இடம் அளிக்க முடியாது
அதனால், அணியில் இருந்த மூன்று டாப் ஆர்டர் வீரர்களான சச்சின், சேவாக் மற்றும் கம்பீரை அழைத்து தன்னால் அனைத்து போட்டிகளிலும் மூவருக்கும் ஒரே நேரத்தில் அணியில் இடம் அளிக்க முடியாது என கூறினார்.
சுழற்சி முறை
அதனால், ஒவ்வொரு போட்டியிலும் இவர்கள் மூவரில் இருவர் மட்டுமே சுழற்சி முறையில் பங்கேற்றனர். கம்பீர் தான் இதில் கடுமையாக பாதிக்கப்பட்டார். அவர் அப்போது சிறப்பாகவே ஆடினார் என்றாலும் அணியில் தொடர்ந்து இடம் அளிக்கப்படவில்லை.
தோல்விகள்
அந்த தொடரில் இந்தியா சரியாக ஆடவில்லை. அதிக தோல்விகளை சந்தித்து தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாத நிலையில் இருந்தது. சில போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
கட்டாய வெற்றி
அது போன்ற கட்டாய வெற்றி தேவைப்படும் போட்டிகளில் சச்சின், சேவாக், கம்பீர் மூவரும் அணியில் இடம் பெற்றனர். அந்த தொடரில் தனக்கு கிடைத்த போட்டிகளில் மட்டும் ஆடி 308 ரன்கள் குவித்த கம்பீர், கோலிக்கு அடுத்து அதிக ரன் குவித்த வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முற்றிலும் குப்பை
தோனியின் இந்த கேப்டன்சி முடிவுகளை தான் கடுமையாக விமர்சித்து பேசி இருக்கிறார் கம்பீர். அவர் கூறுகையில், "ஒருவர் கேப்டனின் முடிவுகளை பின்பற்ற வேண்டும். ஆனால், அது முற்றிலும் குப்பை" என கடும் வார்த்தை பிரயோகம் செய்துள்ளார்.
சரமாரியாக விமர்சித்தார்
மேலும், "நீங்கள் ஒரு சுழற்சி முறையை துவக்கி வைத்தீர்கள். ஆனால், கட்டாய வெற்றி தேவைப்படும் போட்டிகளில் மூவரையும் ஆட வைத்தீர்கள். நீங்கள் ஒரு முடிவு எடுத்தால், உங்கள் முடிவுகளை ஆதரியுங்கள். அதை பின்பற்றுங்கள்" என்று கூறி சரமாரியாக விமர்சித்துள்ளார்.
பகை தீரவில்லை
அந்த தொடரில் ஏற்பட்ட விரிசலுக்கு பின், அடுத்த ஆண்டில் இருந்து கம்பீர் இந்திய அணியில் தன் இடத்தை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது முதல் தோனியை கடுமையாக விமர்சித்து வருகிறார் அவர். அப்போது முதல் அந்த பகை இன்னும் தீரவில்லை.