குல்தீப் அணியின் சொத்து
இதுகுறித்து Cricinfo-வுக்கு அவர் அளித்த பேட்டியில், "இங்கிலாந்துக்கு எதிராக கண்டிப்பாக குல்தீப்பை அவர்கள் சேர்த்திருக்க வேண்டும். இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர்கள் தனித்துவமானவர்கள். அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறாமலேயே அணியில் இருக்கிறார். அவர் அணியின் மிகப்பெரிய சொத்து.
மேட்ச் வின்னர்கள்
குல்தீப்பை இந்த முதல் போட்டியிலேயே சேர்த்திருக்க வேண்டும். இரண்டாவது அல்லது மூன்றாவது டெஸ்ட் போட்டி வரை நாம் காத்திருக்க தேவையில்லை. ஏனெனில், பல்வேறு தருணங்களில், ரிஸ்ட் ஸ்பின்னர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றியிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். எனவே, அவரை சேர்க்காத இந்த முடிவு துரதிர்ஷ்டவசமானது, ஆச்சர்யமாகவும் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
திண்டாடும் இந்திய பவுலர்கள்
சென்னை சேப்பாக்கில் அடிக்கும் வெயில் காரணமாக பிட்ச் வறண்டுள்ளது. நன்றாக பேட் செய்ய முடிகிறது. ஆகையால், அஷ்வினால் கூட பெரிய இம்பேக்ட் ஏற்படுத்த முடியவில்லை. அப்படியிருக்கும் போது, திடீரென அழைக்கப்பட்டிருக்கும் ஷாபாஸிடம் இருந்தும் அதை எதிர்பார்க்க முடியாது.
ஷாபாஸ் சேர்க்கப்பட்டது சரியா?
லெஃப்ட் ஆர்ம் ஆர்தடாக்ஸ் ஸ்பின்னர்களிடம் இங்கிலாந்து கடுமையாக திணறும். இதை கருத்தில் கொண்டே, அக்ஷர் படேல் விலகலையடுத்து, ஷாபாஸ் சேர்க்கப்பட்டார். ஆனால், பிட்ச் நிலையை பார்த்தால், இன்று ஜடேஜா வீசியிருந்தால் கூட, தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடுமா என்று தெரியவில்லை. ஆகையால், இனி அடுத்தடுத்த நாட்களில் பிட்சின் கண்டிஷனை வைத்தே எந்த முடிவுக்கும் வர முடியும்.
கேப்டனாக தவிக்கும் கோலி
ஆஸ்திரேலிய தொடரின் போது, முதல் போட்டியில் கோலி தலைமையின் கீழ் விளையாடிய இந்தியா, மிக மோசமான தோல்வியை பதிவு செய்தது. ஆனால், ரஹானே தலைமையில் எழுச்சிக் கண்டு தொடரை வென்றது. இப்போது மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் கோலிக்கு முதல் நாள் ஆட்டத்திலேயே பல விமர்சனங்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.