திட்டும் வார்த்தைகள்
பைத்தியம், மூளை இல்லாதவர், முட்டாள், மகனே! இப்படி எல்லாம் மாற்றி, மாற்றி பொது வெளியில் திட்டிக் கொண்டுள்ளனர். காஷ்மீர் விவகாரத்தில் மீண்டும் ஒரு முறை அப்ரிடிக்கு பதிலடி கொடுத்துள்ளார் கம்பீர்
காஷ்மீர் விவகாரம்
காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை எதிர்த்து வருகிறது பாகிஸ்தான் அரசு. அந்த நாட்டின் பிரதமராக இருக்கும் முன்னாள் கிரிக்கெட் அணி கேப்டன் இம்ரான் கான் சமீபத்தில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அந்த பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றிற்கு அழைப்பு விடுத்தார்.
அப்ரிடி ஆதரவு
அதற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார் ஷஹித் அப்ரிடி. பிரதமர் அழைப்பை ஏற்று நான் காஷ்மீர் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) செல்லப் போகிறேன். நீங்களும் வாருங்கள் என மக்களுக்கு அழைப்பு விடுத்தார் அப்ரிடி.
கம்பீர் கிண்டல்
அந்த பதிவை கண்ட பரம எதிரி கௌதம் கம்பீர், மோசமாக கிண்டல் செய்தார். ஷஹித் அப்ரிடி தன்னைத் தானே அவமானப்படுத்திக் கொள்கிறார். அவர் முதிர்ச்சி அடைய மறுக்கிறார் என்பது நிரூபணமாகி உள்ளது என்று கூறி கலாய்த்தார்.
குழந்தை புத்தகம்
மேலும், அப்ரிடிக்கு குழந்தைகள் புத்தகம் வாங்கி அனுப்பப் போகிறேன். அது அவருக்கு உதவும் என்று கூறி மோசமாக கலாய்த்து இருந்தார் கம்பீர். அந்த சூடு தணிவதற்குள், மீண்டும் அப்ரிடியை ஒரு பேட்டியில் கலாய்த்து இருக்கிறார்.
மூளை வளர்ச்சி
இந்த முறை இப்படி கூறி இருக்கிறார் கம்பீர் - சிலர் தங்கள் வாழ்க்கை முழுவதும் முதிர்ச்சி அடையாமல் இருக்கின்றனர். சிலர் கிரிக்கெட் ஆடுகிறார்கள். ஆனால், அவர்கள் வயது மட்டும் ஏறவே இல்லை. வயதுடன் சேர்ந்து மூளையும் வளரவில்லை.
அரசியலில் சேரலாமே?
அவர்கள் எல்லா விஷயத்தையும் அரசியலாக்க முடிவு செய்தால், ஏன் அரசியலில் இறங்கக் கூடாது. இருந்தாலும், அரசியல் செய்யவும் மக்களுக்கு மூளை வேண்டும். அது அவருக்கு இல்லை என்று மிக வெளிப்படையாக கலாய்த்து இருக்கிறார் கம்பீர்
அப்ரிடி வயது சர்ச்சை
கௌதம் கம்பீர், "சிலருக்கு கிரிக்கெட் ஆடினாலும் வயது மட்டும் ஏறவே இல்லை" என்று கூறியதில் ஒரு அர்த்தம் பொதிந்துள்ளது. அப்ரிடி பாகிஸ்தான் அண்டர் 19 அணிக்குள் நுழைய வயதை குறைத்துக் காட்டினார் என்று ஒரு சர்ச்சை உள்ளது. அதைத் தான் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
கம்பீர் அரசியல் நகர்வு
கெளதம் கம்பீர் கிரிக்கெட் வீரர் என்பதை தாண்டி தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாறி விட்டார். ஆளும் பாஜக கட்சியின் மக்களவை உறுப்பினராக இருக்கிறார். அதனால், முன்பை விட தீவிரமாக அப்ரிடியை எதிர்த்து வருகிறார். தற்போது அவரை அரசியலுக்கு வருமாறு சீண்டி இருக்கிறார்.
அப்ரிடியும் சேருவாரா?
அதே போல, அப்ரிடி எப்போதுமே காஷ்மீர் விவகாரத்திலும், பிரதமர் இம்ரான் கானுக்கு ஆதரவு தெரிவிப்பதிலும் முன்னணியில் இருக்கிறார். அவரும் பாகிஸ்தான் அரசியலில் குதிக்க வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், கம்பீர் - அப்ரிடி மோதல் இன்னும் தீவிரமடையும். "ஒத்தைக்கு ஒத்தை வம்படி சண்டை"யாக அது மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.