கோலி - கம்பீர் மோதல்
விராட் கோலி - கௌதம் கம்பீர் இருவரும் டெல்லி மாநில கிரிக்கெட் அணியை சேர்ந்தவர்கள் தான். இருந்தாலும் ஏதோ சில காரணங்களால் கம்பீருக்கு, கோலியை பிடிப்பதில்லை. அவரது கேப்டன்சியை விமர்சித்து வருகிறார்.
ஐபிஎல் விமர்சனம்
கடந்த 2019 ஐபிஎல் தொடருக்கு முன் யாருமே நினைத்துப் பார்க்க முடியாத வகையில் கோலியை விமர்சித்தார் கம்பீர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியில் ஏழு ஆண்டுகளாக இருந்தும், ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பை வென்று காட்டவில்லை. இவரை எப்படி தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டனாக வைத்துள்ளது என்றே தெரியவில்லை என்றார் கம்பீர்.
ஐபிஎல் அதிர்வலை
அப்போது கம்பீரின் அந்த விமர்சனம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் அப்போது கோலிக்கு ஆதரவு தெரிவித்தனர், இருந்தும் அந்த தொடரில் பெங்களூர் அணி கடைசி இடத்தை தான் பிடித்தது, பிளே - ஆஃப் கூட செல்லவில்லை.
உலகக்கோப்பை முன்னேற்றம்
அடுத்து நடந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி வரை முன்னேறியது. அப்போது கோலியின் கேப்டன்சி மீது பெரிய விமர்சனங்கள் எழவில்லை. சிலர் ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் பதவி கொடுக்க வேண்டும் என்றனர். அதுவும் சில நாட்களில் அடங்கியது.
டெஸ்ட் போட்டிகள் சாதனை
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை வென்ற கோலி, அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்திய கேப்டன்களில் முதல் இடத்தை பிடித்து புதிய சாதனை படைத்தார். பலரும் கோலி தான் சிறந்த கேப்டன் என பாராட்டி வந்தனர்.
கம்பீர் மீண்டும் விமர்சனம்
இந்த சூழ்நிலையில், எதைப் பற்றியும் யோசிக்காமல் கோலியை மீண்டும் கடுமையாக விமர்சித்து இருக்கிறார் கம்பீர். கோலி கேப்டன்சி சிறப்பாக இருக்க காரணமே ரோஹித், தோனி தான் எனக் கூறி அதிர விட்டுள்ளார்.
அந்த இருவர்
கம்பீர் கூறுகையில், "கோலிக்கு இன்னும் (நல்ல கேப்டன் என நிரூபிக்க) நீண்ட காலம் உள்ளது. கடந்த உலகக்கோப்பையில் அவர் சிறப்பாக செயல்பட்டார், எனினும் அவருக்கு நீண்ட காலம் உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக செயல்படுகிறார் என்றால், அவருக்கு ரோஹித் சர்மா கிடைத்துள்ளார். அவருக்கு தோனி நீண்ட காலம் கிடைத்தார்" என்றார்.
கோலியின் ஐபிஎல் சொதப்பல்
"நீங்கள் லீக் அணிகளை வழிநடத்தும் போது தான் உங்கள் கேப்டன்சி குறித்து பார்க்கப்படும். அப்போது ஆதரவுக்கு வேறு வீரர்கள் இருக்க மாட்டார்கள்" எனக் கூறி ஐபிஎல் தொடரில் கோலியின் சொதப்பல்கள் பற்றி பேசத் துவங்கினார்.
ரோஹித், தோனி ஒப்பீடு
"நான் இதை எப்போது பேசினாலும் உண்மையாகவே பேசுகிறேன். ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ்-இல் என்ன சாதித்தார் என பாருங்கள். தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ்-இல் என்ன சாதித்தார் என பாருங்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் அவற்றை ஒப்பிட்டு பாருங்கள். முடிவுகள் எல்லோருக்கும் தெரியும்" என்று கூறி கடுமையாக மட்டம் தட்டிப் பேசினார் கம்பீர்.
கம்பீர் இப்படித்தான்
கம்பீர் இப்படித் தான் விமர்சித்து பேசுவார் என்றாலும், ஒரேடியாக கோலியை ஒன்றுமே இல்லை என்று கூறி இருப்பது அதிர்ச்சியான கருத்தாக உள்ளது. இதற்கு யாரேனும் பதில் சொல்கிறார்களா? என பார்க்கலாம்.