கம்பீர் - அப்ரிடி மோதல்
கம்பீருக்கும், அப்ரிடிக்கும் கிரிக்கெட் களத்திலேயே பல முறை சண்டை வந்துள்ளது. இருவரும் முட்டிக் கொண்டு, தள்ளி விட்டுக் கொண்ட சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது. சமீபத்தில் அப்ரிடி வெளியிட்ட சுயசரிதையில் கம்பீரை மோசமாக விமர்சித்து இருந்தார். பதிலுக்கு கம்பீர் அவரை பைத்தியம் என்று கூறி இருந்தார்.
|
காஷ்மீர் விவகாரம்
இந்த நிலையில் இருவரும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து இணையத்தில் முட்டிக் கொண்டு இருக்கின்றனர். காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்தும், அந்த மாநிலத்துக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தும் நேற்று ரத்து செய்யப்பட்டது.
அப்ரிடி பதற்றம்
அதைக் கண்ட பாகிஸ்தான் வீரர் அப்ரிடி பதற்றத்தில் இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் காஷ்மீர் மக்களுக்கு உரிய உரிமையை ஐநா தீர்மானத்தின் படி வழங்க வேண்டும். நம்மை போல அவர்களுக்கும் சுதந்திரம் வழங்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
|
ட்ரம்ப் வரை புகார்
மேலும், ஐநா சபை ஏன் உருவாக்கப்பட்டது? அது ஏன் இப்போது தூங்கிக் கொண்டு இருக்கிறது? மனிதத்தன்மைக்கு எதிராக தூண்டுதலற்ற வன்முறை மற்றும் குற்றங்கள் காஷ்மீரில் நடந்து கொண்டு இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதில் தலையிட வேண்டும் என்று பொங்கி எழுந்துள்ளார் அப்ரிடி.
கம்பீர் பதிலடி
இதற்கு பதிலடி கொடுத்த கம்பீர், "அப்ரிடி சரியான விஷயத்தை கூறி உள்ளார். தூண்டுதலற்ற வன்முறைகள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் நடக்கிறது. இதை கூறியதற்காக அவரை பாராட்ட வேண்டும்" என்று கூறியவர், கடைசியாக கிண்டல் அடித்தார்.
கம்பீர் கிண்டல்
"ஆனால், இது எல்லாம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தான் நடக்கிறது என்பதை அவர் கூற மறந்து விட்டார். கவலைப்பட வேண்டாம் மகனே.. நாங்கள் அதை பார்த்துக் கொள்கிறோம்" என சுட்டிக் காட்டி கிண்டல் செய்து அனுப்பினார் கம்பீர்.
ரசிகர்கள் ஆதரவு
கம்பீரின் பதிலடியை பலரும் வரவேற்று கருத்துக்கள் கூறி வருகின்றனர். சிலர் அப்ரிடியை எதிர்த்தும், கிண்டல் செய்தும் கருத்து கூறி வருகின்றனர். பாகிஸ்தான் இந்தியாவில் பிரிந்து சென்றதை அடுத்து சிலர் பாகிஸ்தான், இந்தியாவின் மகன் என கிண்டல் செய்து வரும் நிலையில், "மகனே" என கூறி உள்ளார் கம்பீர்.