மும்பை: இந்திய கேப்டன் விராட் கோலியை கவுதம் காம்பிர் மீண்டும் கடுமையாக சாடியுள்ளார். அவரை விட ரோகித் சர்மா நல்ல கேப்டன் என தெரிவித்துள்ளார் .
இந்திய அணியில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வரும் கோலியால் ஐபிஎல் போட்டியில் ஒன்றுமே செய்ய முடியவில்லை. தொடந்து பல ஆண்டுகளாக பெங்களூரு கேப்டனாக இருக்கும் அவரால் ஒரு கோப்பையை பெற்று தர முடியவில்லை.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் வழக்கம் போலவே பெங்களூரு, சிகர்களுக்கு தோல்வியைத்தான் பரிசளித்தது. இதனால் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்தன.
டெல்லி கிழக்கு எம்பியும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் காம்பிர் கோலியை கடுமையாக தாக்கியிருந்தார். கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மும்பை அணியின் வெற்றி கேப்டன் ரோகித் சர்மாவை இந்திய கேப்டனாக நியமிக்க வேண்டும் என அவர் கூறினார்.
இந்த நிலையில் கவுதம் கம்பிர் மீண்டும் ரோகித் சர்மாவை உயர்த்தி பேசியுள்ளார். இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறுகையில் விராட் கோலி ஒன்றும் மோசமான கேப்டன் இல்ல. ஆனால் ரோகித் சர்மா அவரை விட நல்ல கேப்டன். இவர்களது இரண்டு பேரின் கேப்டன்ஷிப்புக்கு இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது.
ஐபில் தொடரில் இந்திய வீரர்களின் செயல்பாட்டை வைத்து நல்ல வீரர்களை இந்திய அணிக்கு தேர்வு செய்கிறோம். ஆனால் ஐபில் தொடரில் செயல்பட்டை வைத்து ஏன் இந்திய அணிக்கு கேப்டன் தேர்வு செய்யப்படவில்லை.
இதை செய்யவில்லை என்றால் ஐபிஎல்லில் பௌலிங் மற்றும் பேட்டிங் செயல்பாடுகளை வைத்து வீரர்களை இந்திய அணிக்கு தேர்வு செய்யாதீர்கள் என்றார்.