புவனேஸ்வர்: கட்டாக் கிரிக்கெட் மைதானத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியதற்கு ஒடிஷா கிரிக்கெட் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 92 ரன்களில் சுருண்டதால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களை மைதானத்தில் வீசி ரகளையில் ஈடுபட்டனர்.
தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்த போதும் ரசிகர்கள் தங்களது கோபத்தை வெளிக்காட்டினர். இதனால் ஆட்டம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையை இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கவாஸ்கர் கண்டித்திருந்தார். அத்துடன் கட்டாக் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்த 2 ஆண்டுகளுக்கு தடை விதிக்கவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
அதேபோல் ஒடிஷா கிரிக்கெட் சங்கத்துக்கான நிதி உதவியை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்றும் கவாஸ்கர் கோரிக்கை விடுத்திருந்தார்.
கவாஸ்கரின் இந்த கருத்துகள் ஒடிஷா கிரிக்கெட் வாரியத்தை ஆத்திரமடைய செய்துள்ளது. இது குறித்து ஒடிஷா கிரிக்கெட் சங்க நிர்வாகி அஷிர்பாத் பெகேரா கூறுகையில், கட்டாக் மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடத்தப்பட வேண்டுமா என்பது தொடர்பாக முடிவெடுக்க வேண்டிய அதிகாரி கவாஸ்கர் கிடையாது. அவர் ஒரு கிரிக்கெட் வர்ணனையாளர் மட்டுமே. தடை விதிக்கக் கோரும் அதிகாரம் அவருக்கு கிடையாது என்றார்.