கவாஸ்கர் கருத்து
பிசிசிஐயால் ஐசிசியிடம் கூறி பாகிஸ்தானை உலகக்கோப்பையில் இருந்து நீக்க முடியுமா? இது நடக்காத காரியம் என்றே பலரும் கூறி வருகின்றனர். இது குறித்து கவாஸ்கர் தன் கருத்தை கூறி உள்ளார். மேலும், அவர் இந்தியா, பாகிஸ்தான் அணியுடன் உலகக்கோப்பையில் ஆட வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
இது நடக்காது
கவாஸ்கர் இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில், பிசிசிஐ பாகிஸ்தானை உலகக்கோப்பையில் இருந்து தடை செய்ய முயற்சிக்கலாம். ஆனால் அது நடக்காது. மற்ற உறுப்பு நாடுகள் அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என கூறியுள்ளார்.
ஐநா சபையில் கேட்கணும்
இதை கேட்க வேண்டிய இடம் ஐசிசி அல்ல, ஐநா சபை எனவும் கவாஸ்கர் குறிப்பிட்டு காட்டியுள்ளார். மற்ற ஐசிசி உறுப்பு நாடுகள் இதை இரண்டு நாடுகளுக்கு இடையே ஆன பிரச்சனை. இதில் எங்களை ஈடுபடுத்த வேண்டாம் என கூறுவார்கள் என கவாஸ்கர் இதில் உள்ள சிக்கலை எடுத்துக் கூறினார்.
இரண்டு புள்ளிகள்
அதே சமயம், இந்தியா, இதற்கு முன்பு நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்தி உள்ளது, அது போல இந்த முறையும் பாகிஸ்தானை வெல்லும். ஒரு வேளை இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக உலகக்கோப்பையில் ஆடக் கூடாது என்ற முடிவை எடுத்தால், அதனால் பாகிஸ்தான் அணி இரண்டு புள்ளிகள் பெறும் என உலகக்கோப்பை லீக் சுற்றில் கிடைக்கும் புள்ளிகள் பற்றி கூறினார்.
எது பாதிப்பு?
ஆனால், இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி அந்த அணி அரையிறுதி செல்லாமல் பார்த்துக் கொண்டால் அது அவர்களுக்கு பாதிப்பாக அமையும். ஏற்கனவே, இருதரப்பு கிரிக்கெட் நாம் ஆடுவதில்லை. அதுவும் அவர்களை பாதிக்கும் என கவாஸ்கர் கூறினார்.
நாட்டின் பின்னே நிற்பேன்
இந்த கருத்துக்களை கூறினாலும், கவாஸ்கர் தான் நாட்டின் பின்னே நிற்பதாகவும், நாடு என்ன முடிவு எடுத்தாலும் தான் அதனுடன் நிற்பேன் எனவும் தெளிவுபடுத்தினார்.