வீராங்கனைகளுக்கு சம்பளம்
இந்திய மகளிர் அணியினருக்கான வருடாந்திர சம்பள விவரத்தை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. வழக்கம் போல வீராங்கனைகளை ஏ, பி, சி என மூன்று தரமாக பிரித்து சம்பளத்தை நிர்ணயித்துள்ளது பிசிசிஐ. டி20 கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஏ பிரிவில் வருகிறார்.
மித்தாலிக்கு பி பிரிவு
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான கேப்டன் மித்தாலி ராஜ் பி பிரிவுக்குத் தள்ளப்பட்டுள்ளார். இது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மகளிர் கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கர் என்று போற்றப்படுபவர் மித்தாலி. அவரை கொண்டு போய் பி பிரிவில் வைத்துள்ளனர்.
ஏ பிரிவுக்கு 50 லட்சம்
ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, பூனம் யாதவ் ஆகியோருக்கு வருடாந்திர சம்பளம் வெறும் 50 லட்சம் ரூபாய்தான். இதுதான் ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதெல்லாம் ஒரு சம்பளமா. ஆண்களைப் போலவேதான் இந்திய வீராங்கனைகளும் நிறைய உழைக்கின்றனர். அவர்களுக்கு இப்படியா சம்பளம் தருவது என்று ரசிகர்கள் கேட்கிறார்கள்.
பி பிரிவுக்கு ரூ. 30 லட்சம்
பி பிரிவில் மித்தாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, தீப்தி சர்மா, பூனம் ராத், ராஜேஸ்வரி கெய்க்வாட், சபாலி வர்மா, ராதா யாதவ், ஷிகா பாண்டே, தனியா பாட்டியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோர் வருகின்றனர். இவர்களுக்கு வருடாந்திர சம்பளம் தலா ரூ. 30 லட்சமாகும்.
சி பிரிவுக்கு 10 லட்சம்
சி பிரிவில் வருவோர் மன்ஷி ஜோஷி, அருந்ததி ரெட்டி, பூஜா வஸ்திராகர், ஹர்லீன் தியோர், பிரியா பூனியா, ரிச்சா கோஷ். இவர்களுக்கு வருடம் தலா ரூ. 10 லட்சம் சம்பளமாக நிர்ணயித்துள்ளது பிசிசிஐ. ஆண் வீரர்களுக்கு தரப்படும் சம்பளத்துடன் ஒப்பிட்டால் இது மளிகைக் கடையில் காய்கறி வாங்கி விட்டு கடைசியாக கொசுறு கொத்தமல்லி கொடுப்பாங்களே அதற்கு சமமாகும்.
கோலிக்கு அடேங்கப்பா சம்பளம்
சமீபத்தில்தான் ஆண்களுக்கான சம்பளத்தை அறிவித்தது பிசிசிஐ. அதில் ஏபிளஸ், ஏ,பி,சி என 4 பிரிவுகள்தான். கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோரை ஏ பிளஸ் கேட்டகிரியில் சேர்த்து அவர்களுக்கு வருடத்திற்கு தலா ரூ. 7 கோடியை சம்பளமாக அறிவித்தது பிசிசிஐ. 7 கோடி எங்கிருக்கு.. 50 லட்சம் எங்கிருக்கு பாருங்க!
அஸ்வினுக்கு 5 கோடி
ஏ பிரிவில் ஆர். அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, சட்டேஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரஹானே, ஷிகர் தவான், கே.எல். ராகுல், முகம்மது ஷமி, ரிஷப் பந்த், ஹர்டிக் பாண்ட்யா ஆகியோர் வருகின்றனர். இவர்களுக்கு தலா ரூ. 5 கோடி சம்பளமாகும். மித்தாலி போன்றோருக்கு தரப்படும் சம்பளம் வெறும் 30 லட்சம்தான்.
சி பிரிவுக்கு 1 கோடி சம்பளம்
சி பிரிவில் வரும் வீரர்களுக்கு தலா ரூ. 1 கோடி சம்பளமாகும். இதில் விருத்திமான் சாஹா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்கூர், மயங்க் அகர்வால் ஆகியோர் வருகின்றனர். அப்படீன்னா நம்ம நட்டு நடராஜன் எந்த லிஸ்ட்டில் இருக்கிறார் என்று தேடறீங்களா.. அவரையெல்லாம் இந்த லிஸ்ட்டுக்கே இன்னும் கொண்டு வரவில்லை என்பதுதான் பெரிய சோகம்!