3வது டெஸ்ட்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 3வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை முடித்துள்ள நிலையில் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 96 ரன்களை அடித்துள்ளது.
துவக்க வீரர் சுப்மன் கில்
இந்த போட்டியில் ரோகித் சர்மாவுடன் இணைந்து துவக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அடித்துள்ளார். தன்னுடைய இரண்டாவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடிவரும் அவர் 50 ரன்களை அடித்துள்ளார். இதன்மூலம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.
கில் குறித்து ஹஸ்ஸி பாராட்டு
இந்நிலையில் சுப்மன் கில் தனது விருப்பத்திற்குரிய பேட்ஸ்மேனாக மாறியுள்ளதாக ஆஸ்திரேலிய கோச் மைக் ஹஸ்ஸி பாராட்டு தெரிவித்துள்ளார். குறைவான சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள சுப்மன் கில் தன்னுடைய குறைவான போட்டிகளில் நிறைவான தருணங்களை இந்திய அணிக்காக தந்துள்ளார்.
130 ரன்கள்
கடந்த போட்டியில் 45 மற்றும் அவுட் ஆகாமல் 35 ரன்களை எடுத்திருந்த கில், தற்போது முதல் இன்னிங்சில் 50 ரன்களை எடுத்துள்ளார். இந்த 130 ரன்களில் 92 ரன்கள் பவுண்டரிகள் மூலம் அடிக்கப்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் 100 பந்துகளில் 50 ரன்களை எடுத்துள்ள கில், அதில் 8 பவுண்டரிகளை அடித்துள்ளார்.