ரோஹித் சர்மா டெஸ்ட் வாய்ப்பு
ஒருநாள் மற்றும் டி20 அணியில் முக்கிய வீரராக, உலகின் முன்னணி பேட்ஸ்மேன் ஆக வலம் வரும் ரோஹித் சர்மா கடந்த 2013ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். அப்போது முதல் வெறும் 27 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ளார்.
வெ.இண்டீஸ் தொடர் புறக்கணிப்பு
ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியில் இடம் மறுக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வந்தது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஒரளவு நன்றாக ஆடியும், அதற்கு அடுத்து நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு களமிறங்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. வெளியே அமர வைக்கப்பட்டார்.
துவக்க வீரர் வாய்ப்பு
இந்த நிலையில், டெஸ்ட் அணியில் அவரை மிடில் ஆர்டர் வீரராக மட்டுமே பார்த்து வந்த அவரை துவக்க வீரராக்க முடிவு செய்தது ரவி சாஸ்திரி - கோலி கூட்டணி. காரணம், துவக்க வீரர் ராகுல் சரியாக ஆடவில்லை.
யுவராஜ் சிங் கருத்து
ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 அணியில் துவக்கம் அளிக்கும் நிலையில் டெஸ்ட் அணியிலும் துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என பலரும் நீண்ட காலமாக கூறி வருகின்றனர். யுவராஜ் சிங்கும் அதே கருத்தை கூறி உள்ளார்.
துவக்கம் முதலே..
"என்னைக் கேட்டால் ரோஹித் சர்மா தன் கிரிக்கெட் வாழ்வின் துவக்கம் முதலே டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக ஆடி இருக்க வேண்டும்" என்றார் யுவராஜ் சிங். அடுத்து அவருக்கு சரியான வாய்ப்பு கொடுக்காதது பற்றி அதிரடியாக பேசினார்.
10 டெஸ்ட் கூட கொடுக்காமல்..
அவரை ஒரு போட்டியில் ஆட வைப்பதும், பின் நீக்குவதுமாக இருந்து விட்டு, அவர் ரன் எடுக்கவில்லை என்று சொல்கிறீர்கள். ஒருவருக்கு 10 டெஸ்ட் போட்டிகள் கூட கொடுக்காமல் எப்படி சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்ப்பீர்கள்? என்று கேட்டார் யுவராஜ்.
6 போட்டிகள் தரவேண்டும்
தற்போது ரோஹித் சர்மாவை துவக்க வீரராக இறக்கப் போகிறீர்கள் என்றால் அவருக்கு ஆறு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கொடுங்கள். அவரிடம், "ரோஹித், உங்களுக்கு 10 - 12 இன்னிங்க்ஸ் உள்ளது. உங்கள் ஆட்டத்தை ஆடுங்கள், யாரும் எதுவும் சொல்ல மாட்டோம்" என கூற வேண்டும் என்றார் யுவராஜ்.
ராகுலுக்கு அதிக வாய்ப்பு
மேலும், கேஎல் ராகுலுக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்தீர்கள். உங்கள் துவக்க வீரர் யாராக இருந்தாலும் ஆறு டெஸ்ட் போட்டிகள் வரை வாய்ப்பு கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்றார் யுவராஜ்.
பயிற்சிப் போட்டியில் டக் அவுட்
யுவராஜ் சிங், ரோஹித் சர்மாவுக்கு வரிந்து கட்டிக் கொண்டு இருந்த அதே நேரத்தில் ரோஹித் சர்மா தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு முந்தைய பயிற்சிப் போட்டியில் டக் அவுட் ஆனார். ஆனால், இது போன்ற சறுக்கல்களை தான் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து ஆறு போட்டிகளில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்கிறார் யுவராஜ்.
மூன்று போட்டிகள் கிடைக்குமா?
அது நடக்க வாய்ப்பே இல்லை. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ரோஹித் சரியாக ரன் குவிக்கவில்லை என்றால் அடுத்த இரண்டு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பதே கடினம் தான் என பேசப்படுகிறது.