3 தினங்களில் துவக்கம்
ஐபிஎல் 2021 தொடர் இன்னும் 3 தினங்களில் துவங்கவுள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்த சீசனில் பொறுப்பேற்றுள்ளார் அந்த அணியின் சஞ்சு சாம்சன். இளம் வீரரான அவர் முன்னதாக கேரள அணியின் அன்டர் 19 மற்றும் இந்திய அணியின் அன்டர் 19 அணிகளில் கேப்டனாக செயல் புரிந்துள்ளார்.
விராட், ரோகித், தோனி வாழ்த்து
தான் கேப்டனாக பொறுப்பேற்றவுடன் கேப்டன் விராட் கோலி, குறைந்த ஓவர்களின் துணை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஆகியோர் அடுத்தடுத்து தனக்கு வாழ்த்துக்களை தெரிவித்து மெசேஜ் அளித்ததாக சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய பலம்
மேலும் அணியின் கிரிக்கெட் இயக்குநராக குமார சங்ககாரா உள்ளது தனக்கு மிகப்பெரிய பலத்தை அளித்துள்ளதாகவும் சஞ்சு தெரிவித்துள்ளார். அவருடன் பேசுவதே மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் அது தன்னிடம் இருந்த ப்ரஷரை நீக்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிறப்பாக போட்டியை அணுக வேண்டும்
கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதி அணியாக தொடரில் இருந்து வெளியேறியது. ஆயினும் அணியில் சிறப்பான வீரர்கள் இருந்ததாகவும் இந்த சீசனில் அணியின் தேவை சிறப்பான ஒரு போட்டியை அணி வீரர்கள் விளையாடுவது மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார். பயமில்லாமல் போட்டிகளை அணுக வேண்டிய அவசியம் குறித்தும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.