ரசிகர்கள் விமர்சனம்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியானது விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி விளையாடும் 3வது ஐசிசி தொடராகும். இந்த 3 தொடர்களிலுமே இந்திய அணி இறுதிவரை சென்று ப்ளே ஆஃப் சுற்றுகளில் வெளியேறிவிடுகிறது. இதனால் ஏமாற்றமடைந்த இந்திய ரசிகர்கள் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.
பெரும் குற்றம்
இந்நிலையில் இதற்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் க்ரீம் ஸ்வான் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், விராட் கோலி ஒரு சிறந்த வீரர், ஒரு சூப்பர் ஸ்டார். இந்திய அணியின் பலமே அவர் தான். அவரின் அர்ப்பணிப்பை நீங்கள் பார்க்க வேண்டும். இந்தியாவுக்கு தற்போது சிறந்த கேப்டன் அமைந்துள்ளார். அவரை மாற்றினால் அதனை விட பெரிய குற்றம் வேறு எதுவும் இருக்காது.
தோல்விக்கு காரணம்
இந்திய அணி தோற்றதற்கு குறைவான பயிற்சியே காரணம். நியூசிலாந்து அணி ஏற்கனவே இங்கிலாந்துக்கு சென்று, 2 டெஸ்ட் போட்டிகள் ஆடி தங்களது பலத்தை அறிந்திருந்தனர். ஆனால் இந்திய அணி வலைப்பயிற்சி மட்டுமே மேற்கொண்டது. எனவே ஆட்டம் முழுவதுமாக நியூசிலாந்தின் பக்கம் சென்றது. இதற்கு விராட் கோலி மீது புகார் கூறக்கூடாது எனத்தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து தொடர்
முன்னதாக தோல்வி குறித்து பேசியிருந்த விராட் கோலி, இந்திய அணிக்கு முதல் தர பயிற்சி ஆட்டம் வேண்டும் எனக்கூறியிருந்தோம், ஆனால் அதனை கொடுக்கவில்லை எனத்தெரிவித்திருந்தார். இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கும் இந்த தொடர் செப்.14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. எனவே இந்த தொடருக்காவது விராட் கோலி கேட்கும் பயிற்சி ஆட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.