பிற்பகலில் வந்த விமானம்
இந்த நிலையில், இன்று தாயகம் திரும்பிய தங்கமகன் நீரஜ் சோப்ராவை டெல்லி விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வரவேற்றனர். அவர் கிட்டத்தட்ட 80 இந்திய விளையாட்டு வீரர்களுடன் நாடு திரும்பினார். இந்திய ஒலிம்பிக் வீரர்களின் விமானம், பிற்பகலில் டெல்லியில் தரையிறங்கியது. அதன்பிறகு ஒலிம்பிக் போட்டியாளர்கள் மற்றும் பதக்கம் வென்றவர்கள் அசோகா ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு நடந்த நிகழ்வில் அனைவரும் பாராட்டப்பட்டனர்.
இதை எதிர்பார்த்தேன்
நீரஜ் சோப்ரா, மற்ற விளையாட்டு வீரர்களுடன் ஒப்பிடும்போது, அவரைச் சுற்றி மிகப்பெரிய கூட்டம் மொய்த்தது. கிரிக்கெட் வீரர்கள் கூட தோற்றுவிடுவார்கள் போல. அத்தனை கூட்டம். அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு சுதந்திர இந்தியாவின் இரண்டாவது ஒலிம்பிக் தங்க பதக்கம் வென்றவருக்கு இதைவிட வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்? இதுகுறித்து இந்தியா டுடேவுக்கு அவர் அளித்த பேட்டியில், "வீடு திரும்பியது மகிழ்ச்சியாக இருக்கிறது, நான் இதை எதிர்பார்த்தேன்" என்று கூறினார்.
கட்டுக்கடங்காத கூட்டம்
இதற்கிடையே நீரஜ் சோப்ராவின் பெற்றோர் திங்கள்கிழமை அதிகாலை பானிபட்டில் இருந்து டெல்லி புறப்பட்டனர். இந்தியாவின் புதிய தேசிய ஹீரோவான தங்கள் மகனை வரவேற்க அவர்கள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். இதுகுறித்து நீரஜ் சோப்ரா, இந்தியா டுடேவிடம் பேசுகையில், வெற்றிப் பெற்ற தருணம் குறித்தும், டோக்கியோவில் இந்திய தேசிய கீதம் ஒலித்த போது ஏற்பட்ட உணர்வுகள் குறித்தும் தனது பெற்றோருடன் தொலைபேசியில் பேசுவதற்கு நிறைய நேரம் செலவிட விரும்பவில்லை என்றும் ஏனெனில் வீட்டில் இருக்கும் போது பெற்றோரிடம் பேச நிறைய நேரம் இருக்கும் என்றும் அவர் கூறினார். இதுகுறித்து அவர் கூறுகையில், "என்னால் இன்னும் எனது பெற்றோருடன் பேச முடியவில்லை. நான் அவர்களிடம் இப்படி அவசரப்பட்டு பேச விரும்பவில்லை. நான் அவர்களுடன் நன்றாக உட்கார்ந்து பேச விரும்புகிறேன். உங்களுடன் நான் பேசும் விதத்தில் என்னால் அவர்களுடன் பேச முடியாது" என்றும் கூறினார்.
பெருமையான தருணம்
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நீரஜ், "இறுதிப் போட்டி நடைபெற்றபோது, முந்தைய த்ரோவை விட மிகச் சிறப்பாக நான் இன்னும் முன்னேற வேண்டும் என்பது தான் என் மனதில் ஒரே ஒரு விஷயம் இருந்தது. உடல் முற்றிலும் நன்றாக ஒத்துழைத்தது, நான் என்னால் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்த முடியும் என்று உணர்ந்தேன். என்னால் தேசிய சாதனையை முறியடிக்க முடியாவிட்டாலும், எனது தனிப்பட்ட திறமையைச் செய்ய முடியாவிட்டாலும், ஒலிம்பிக் தங்கம் வெல்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மற்ற அனைவரும் தங்கள் இறுதி த்ரோவில் போதுமான அளவு தூரம் வீசத் தவறியதால் தான், நான் தங்கம் வென்றுள்ளேன் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் கவனம் செலுத்த வேண்டியிருந்தது, ஏனென்றால் நீங்கள் தங்கம் வென்றதாக மகிழ்ச்சி அடைந்தால், தேவையான முயற்சியை மேற்கொண்டு செய்ய முடியாது. தேசிய கீதம் இசைக்கப்படும் போது நான் தங்கப் பதக்கத்துடன் நின்று கொண்டிருந்த போது அது ஒரு பெருமையான தருணமாக இருந்தது. அந்த நேரத்தில் உணர்ச்சி வசப்பட்டேன். மிகவும் பெருமையாக இருந்தது. இந்திய தடகளத்திற்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் அளவுக்கு எனக்கு பயிற்சி அளித்த எனது பயிற்சியாளர்கள் உவே சார் மற்றும் கிளாஸ் சார் ஆகியோருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்" என்று கூறியிருந்தார்.