மீண்டும் பயிற்சி ஆரம்பம்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஏறக்குறைய அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வீரர்களும் வீட்டில் முடங்கியுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு, வீரர்கள் தனிப்பட்ட முறையில் பயிற்சி மேற்கொள்ள முடிவெடுத்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி
வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இங்கிலாந்து டெஸ்ட் போட்டித் தொடர்களில் மோத திட்டமிட்டுள்ளது. இதை முன்னிட்டே கடந்த இரண்டு மாதங்களாக பயிற்சிகள் இன்றி வீட்டில் அடைபட்டுள்ள வீரர்களுக்கு பயிற்சி அளிக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முன்வந்துள்ளது.
பென் ஸ்டோக்ஸ் பயிற்சி
கொரோனாவால் கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ள நிலையில் இந்த தொடர்கள் திட்டமிட்டபடி நடைபெற்றால், கடந்த மார்ச் மாதத்திலிருந்து கிரிக்கெட் போட்டிகளை நடத்திய முதல் போர்ட் இங்கிலாந்து என்ற பெயர் கிடைக்கும். முதல் கட்டமாக இந்த வார துவக்கத்தில் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தனிப்பட்ட முறையில் பயிற்சி பெற்ற நிலையில் தற்போது பென் ஸ்டோக்ஸ் பயிற்சி பெற்றுள்ளார்.
சிறப்பான அனுபவம்
இந்நிலையில் தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் பயிற்சிகளை பெற்றுள்ள பென் ஸ்டோக்ஸ், மீண்டும் மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சிகளை செய்தது சிறந்த அனுபவமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். தான் பயிற்சி செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்துள்ள அவர், இவ்வாறு கூறியுள்ளார்.