டெஸ்ட் தொடரில் இந்திய அணி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான தொடர்களில் பங்கேற்கும் வகையில் கடந்த மாதத்தில் ஐபிஎல் 2020ஐ முடித்துக் கொண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றது. அங்கு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடியுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
புது ஆண்டு... புது ஃபீல்
பொங்கலை கழித்துதான் இந்திய வீரர்கள் இந்தியா வரவுள்ளனர்.இந்நிலையில் தற்போது மெல்போர்னில் பயிற்சிகளில் ஈடுபட்டுவரும் இந்திய வீரர்கள் தங்களது புத்தாண்டு கொண்டாட்டங்களை அங்கு மேற்கொண்டனர். இந்திய வீரர் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், பும்ரா மற்றும் ஊழியர்களுடன் தான் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு புது ஆண்டு, புது பீல் மற்றும் அதே கனவுகள் என்று கேப்ஷன் வெளியிட்டுள்ளார்.
ரஹானே வாழ்த்து
பிசிசிஐயும் தனது புத்தாண்டு வாழ்த்துக்களை அழகான புகைப்படத்துடன் தெரிவித்துள்ளது. இதனிடையே 2020ம் ஆண்டு நாம் விரும்பியதை தரவில்லை என்றாலும் நமக்கு கிடைத்துள்ளவற்றிற்காக பாராட்டிக் கொள்ளலாம் என்று டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டன் அஜிங்க்யா ரஹானே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மரியாதையை கற்று தந்த 2020
2020 தந்த படிப்பினைகளை கொண்டு இந்த ஆண்டை சிறப்பாக அமைத்து கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். இதேபோல ரவி அஸ்வினும் தனது புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதனிடையே 2020 மரியாதை உள்ளிட்டவற்றை கற்றுக் தந்துள்ளதாகவும், நம்முடைய அன்புக்குரியவர்களுடன் அதிக நேரத்தை செலவிட வாய்ப்பளித்துள்ளதாகவும் துவக்க வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர் மகிழ்ச்சி
2020 தனக்கு அதிகப்படியான வாய்ப்புகள், வளர்ச்சி மற்றும் படிப்பினைகளை கொடுத்துள்ளதாக ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். இந்த படிப்பினைகளுடன் இந்த ஆண்டை எதிர்கொள்ள தயாராகியுள்ளதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்.
முடங்கிய கிரிக்கெட்
கடந்த ஆண்டில் கொரோனா காரணமாக அதிகமான போட்டிகளில் இந்திய அணியினர் விளையாடவில்லை. ஐபிஎல் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர்களே குறிப்பிட்டு சொல்லும்படியாக அமைந்தது. இந்நிலையில் இந்த ஆண்டை வரும் 7ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியுடன் இந்தியா துவங்கவுள்ளது.