இந்திய அணியில் யுவராஜ் சிங்
அண்டர் 19 இந்திய அணி உலகக்கோப்பை வென்ற போது அந்த அணியில் இருந்தார் யுவராஜ் சிங். அவரது சிறப்பான பேட்டிங் மற்றும் பீல்டிங் காரணமாக இளம் வயதில் கங்குலியின் தலைமையில் இந்திய அணியில் ஆடும் வாய்ப்பை பெற்றார்.
ரசிகர் கூட்டம்
சச்சின் அவுட் ஆனாலே போட்டியை பார்க்காமல் எழுந்து செல்லும் கூட்டத்தை, மிடில் ஆர்டரில் யுவராஜ் சிங் ஆடும் வரை பார்ப்போம் என கட்டிப் போட்டார். துவக்கம் முதலே சிறந்த பினிஷராக இருந்தார் யுவராஜ் சிங்.
2007 டி20 உலகக்கோப்பை
அடுத்து தோனி தலைமையில் இளம் அணி 2007 டி20 உலகக்கோப்பை ஆடச் சென்றது. அந்த அணியில் சீனியர் வீரராக இருந்தார் யுவராஜ் சிங். தோனிக்கும் அவர் தான் சீனியர்.
பிளின்டாப்புடன் மோதல்
அந்த தொடரில் வென்றே தீர வேண்டிய போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது இந்திய அணி. இங்கிலாந்து வீரர் பிளின்டாப், யுவராஜ் சிங்கை முறைக்க, அதற்கு அடுத்த ஓவரை வீசிய ஸ்டூவர்ட் பிராட் பலியாடாக சிக்கினார்.
12 பந்துகளில் அரைசதம்
பிராட் ஓவரின் ஆறு பந்துகளையும் சிக்ஸர் விளாசி சாதனை செய்தார் யுவராஜ் சிங். மேலும், 12 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை செய்தார். இன்று வரை அந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை. அந்தப் போட்டியில் இந்தியா வென்றது. பின் உலகக்கோப்பையையும் வென்று சாதித்தது.
வெற்றிகள்
அடுத்து 2011 உலகக்கோப்பை தொடரில் துவக்க வீரராக சச்சின் ரன் மழை பொழிந்து வந்தார். மிடில் ஆர்டரில் யுவராஜ் சிங் பல போட்டிகளை சிறப்பாக பினிஷிங் செய்து வெற்றிகளை பெற்றுத் தந்தார்.
கொண்டாடி வந்த நேரம்
ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங் அந்த உலகக்கோப்பை தொடரில் பந்துவீச்சிலும் சிக்கலான நேரத்தில் கை கொடுத்தார். ரசிகர்கள் யுவராஜ் சிங்கை தலையில் வைத்து கொண்டாடி வந்த நேரம். அப்போது தான் அவரது உடலில் கேன்சருக்கான அறிகுறிகள் தென்படத் துவங்கின.
ஓய்வு எடுக்க மறுப்பு
2011 உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் சுற்றுப் போட்டிக்கு பின் யுவராஜ் சிங்கிற்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதைக் கண்ட சச்சின், தோனி பதறிப் போய் அவரை ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்கள். ஆனால், மறுத்தார் யுவராஜ் சிங்.
இறுதிப் போட்டிக்கு முன்..
இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் இரத்த வாந்தி எடுத்துள்ளார். அதைப் பார்த்த ஹர்பஜன் சிங், இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங்கிற்கு ஓய்வு கொடுக்குமாறு அணி நிர்வாகத்திடம் பேசப் போவதாக கூறி இருக்கிறார்.
அது தான் யுவராஜ் சிங்
அப்போது யுவராஜ் சிங், நாளைக்கு நான் இறந்தாலும் அது முக்கியமல்ல. இறுதிப் போட்டியில் கடைசி ஓவர் வரை நான் ஆடுவேன் என்று கூறி இருக்கிறார். அது தான் யுவராஜ் சிங்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் யுவி!