தடுமாற்றம்
அகமதாபாத்தில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். தொடக்க வீரர் சுப்மன் கில் வந்த வேகத்தில் வெளியேற, கேப்டன் கோலியும் டக் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். ரோகித் சர்மா மட்டும் 47 ரன்கள் எடுத்து வெளியேற இந்திய அணி 80 / 4 என தடுமாறியது.
பண்ட் அதிரடி
இதனையடுத்து 4 விக்கெட்டிற்கு களமிறங்கிய ரிஷப் பண்ட் அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்தினார். சிறப்பாக ஆடிய அவர் சதமடித்து அசத்தினார். ஆனால் அவர் 100வது ரன்னை எடுத்தவிதம் அனைவரையும் வியக்கவைத்தது. ஆட்டத்தின் 83வது ஓவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் மூத்த வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசினார். ஆனால் அதனை ரிவேர்ஸ் ஷாட் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். இது அனைவரையும் வியக்கவைத்தது.
புகழாரம்
இது குறித்து பேசிய ஹர்பஜன், இது போன்ற ஒரு ஷாட் அடிக்க தனி தைரியம் வேண்டும். பண்ட்-ன் ரிவேர்ஸ் ஷார், ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு வாழ்வில் என்றும் மறக்காது. அவர் ஓய்வு பெற்றாலும், கிரிக்கெட்டில் அவருக்கு எதிராக அடித்த சிறந்த ஷாட்களில் பண்ட்-ன் ஷாட்டும் இடம் பெறும். ஏனென்றால் ஒரு இளம் வீரர், மிகப்பெரும் பந்துவீச்சாளரான ஆண்டர்சனின் பந்தை விளாசியுளார் என தெரிவித்தார்.
திறமைசாலி
இங்கிலாந்தின் 205 ரன்களை கடக்கும் வரை பழைய பந்தில் ரிஷப் பண்ட் நிதானமாக ஆடி வந்தார். ஆனால் அதனை கடந்தவுடன் தனது இயல்பான ஆட்டமான அதிரடியை காட்டினார். ஆண்டர்சனுக்கும் இதே கேள்வி எழுந்திருக்கும் என நினைக்கிறேன். ரிஷப் பண்ட் நிலைமையை புரிந்துக்கொண்டு பொறுப்பை தனது தோல்களில் ஏற்றிக்கொள்கிறார். ஒரு சிறப்பான வீரர் அவர் என ஹர்பஜன் புகழாரம் சூட்டினார்.