சாத்தான்குளம் சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் சிறையில் இருந்த நிலையில் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். அவர்கள் மரணத்துக்கு காரணம் காவலர்கள் சிலர் நடத்திய கொடூர தாக்குதல் தான் என கூறப்படுகிறது.
தேசிய அளவில் கவனம்
இந்த படுகொலையை கண்டித்து வணிகர்கள் போராட்டம் நடத்தினர். தமிழக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம், தேசிய அளவில் கவனம் பெற வேண்டும் என நெட்டிசன்கள் இதுபற்றி இணையத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர்.
சினிமா பிரபலங்கள்
தமிழக சினிமா பிரபலங்கள் சிலர் இந்த விவகாரத்தில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி இருந்தனர். நீதி கிடைக்கக் வேண்டும் என குரல் எழுப்பி இருந்தனர். இந்த நிலையில், கிரிக்கெட் வீரர்களையும் குரல் கொடுக்க வைத்துள்ளது இந்த சம்பவம்.
ஷிகர் தவான்
இந்திய அணி துவக்க வீரர் ஷிகர் தவான் தான் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது நடந்த கொடூர தாக்குதல் குறித்து கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், அவர்கள் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார். அவரை அடுத்து ஹர்பஜன் சிங்கும் குரல் கொடுத்துள்ளார்.
தமிழில் பதிவு
ஹர்பஜன் சிங் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து தமிழிலேயே பதிவு பகிரப்பட்டுள்ளது. "அடிப்பவனுக்கு தேவை ஆயுதம். வலிப்பவருக்கு தேவை காரணம். இனத்துக்காக, மதத்துக்காக, நிறத்துக்காகன்னு போய், இப்போ எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும். கடந்து செல்வது எளிதல்ல, நீதி கிடைக்காமல் மறந்து செல்வது மனிதமல்ல. மனிதம் எங்கே" என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஸ்வின் பதிவு
தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினும், இந்த விவகாரம் குறித்து பேசி உள்ளார். "ஒவ்வொருவர் உயிரும் முக்கியம். இந்த கொடுமைக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால், நீதி கூட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு ஆறுதல் தருமா என தெரியாது. அவர்களை குறித்தே என் எண்ணங்கள் உள்ளது என அவர் கூறி உள்ளார்." என்றார்.
நெட்டிசன்கள் கவன ஈர்ப்பு
தமிழக நெட்டிசன்கள் இந்த விவகாரத்திற்கு தேசிய அளவில் கவனம் பெற்றுக் கொடுத்துள்ளனர். அதை அடுத்தே கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து ஜெயராஜ், பென்னிக்ஸ்-ற்கு நீதி கிடைக்க வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றனர்.