கடும் விமர்சனம்
ஹர்பஜன் சிங் கடந்த சில ஆண்டுகளாக அஸ்வினை கடுமையாக விமர்சித்து வந்தார். டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி தன் வர்ணனை மற்றும் பேட்டிகளில் விளாசி வந்தார். ஆனால், தற்போது அஸ்வினுக்கு ஆதரவாக பேசி வியக்க வைத்துள்ளார்.
கடைசி போட்டி
அஸ்வின் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 அணியில் இடம் பெறுவதில்லை. ஜடேஜா - அஸ்வின் ஜோடி ஒருநாள் - டி20 அரங்கில் கோலோச்சி வந்த நிலையில், 2017 சாம்பியன்ஸ் ட்ராபி தோல்விக்குப் பின் அவர்களை நீக்கியது இந்திய அணி.
டெஸ்ட் அணி மட்டுமே
பின்னர், அஸ்வின் டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் பெற்று ஆடி வருகிறார். அதிலும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களுக்கு நடுவே காயம் காரணமாக பாதி தொடரில் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
குல்தீப் யாதவ்வுக்கு ஆதரவு
அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்று ஆடிய குல்தீப் யாதவ், ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அப்போது ஹர்பஜன் சிங், அணியின் முதன்மை சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் தான். அஸ்வின் இல்லை என பேட்டி அளித்து பரபரப்பை கிளப்பினார்.
மாறிய காட்சிகள்
ஆனால், 2019 உலகக்கோப்பை தொடருக்குப் பின் காட்சிகள் மாறின. அவ்வப்போது டெஸ்ட் போட்டிகளில் இடம் பெற்று வந்த ஜடேஜா டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணியின் முக்கிய வீரர் ஆனார். குல்தீப் யாதவ் ஒருநாள், டி20 பார்ம் அவுட் காரணமாக டெஸ்ட் அணியில் தன் முக்கியத்துவத்தை இழந்தார்.
சிறப்பான செயல்பாடு
அஸ்வின் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் வாய்ப்பு பெறாவிட்டாலும் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் சிறப்பாக விக்கெட் எடுத்து தன்னை நிரூபித்தார். தொடர்ந்து வங்கதேச டெஸ்ட் தொடரிலும் சிறப்பாக ஆடி வருகிறார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடர்
அடுத்து வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், ஹர்பஜன் சிங் அஸ்வினுக்கு ஏன் குறைந்த ஓவர் (ஒருநாள் மற்றும் டி20) போட்டிகளில் வாய்ப்பு அளிக்கக் கூடாது? என கேள்வி எழுப்பி உள்ளார்.
வாய்ப்பு கேட்ட ஹர்பஜன் சிங்
டி20 அணியில் ரன் விகிதத்தை குறைக்க ஒரு ஸ்பின்னரை (வாஷிங்க்டன் சுந்தர்) வைத்திருக்கும் போது, ஏன் விக்கெட் வீழ்த்துபவரான அஸ்வினை அணியில் எடுக்கக் கூடாது? அவர் டெஸ்ட் போட்டிகளில் சமீபத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்" என கூறினார் ஹர்பஜன் சிங்.
சாஹல் - குல்தீப் நிலை
மேலும், சாஹல் - குல்தீப் யாதவ் டி20 அணியில் திடீரென நீக்கப்பட்டார்கள். பின், சாஹல் மட்டும் மீண்டும் வாய்ப்பு பெற்றார். இது குறித்து பேசிய ஹர்பஜன் சிங், அவர்கள் இருவரும் தான் சிறந்த விக்கெட் வீழ்த்துபவர்கள். ஆனால், அவர்கள் ஏன் அணியில் இல்லை என்பதை அணி நிர்வாகத்திடம் தான் கேட்க வேண்டும் என கூறினார்.